70 கி.மீ. வேகத்தில் வந்தபோது ரெயிலை நிறுத்தி பெண்ணின் உயிரை காத்த டிரைவர்!


70 கி.மீ. வேகத்தில் வந்தபோது ரெயிலை நிறுத்தி பெண்ணின் உயிரை காத்த டிரைவர்!
x
தினத்தந்தி 3 Feb 2017 12:44 PM GMT (Updated: 3 Feb 2017 12:44 PM GMT)

ரெயில் 70 கி.மீ. வேகத்தில் வந்தபோது தண்டவாளத்தில் நடந்த பெண் உயிர்தப்பியது தொடர்பான அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மும்பை, 

மும்பையின் சர்ச்கேட் பகுதிக்கு செல்லும் புறநகர் ரெயில் ஒன்று கடந்த டிசம்பர் 6-ந்தேதி நள்ளிரவில் அங்குள்ள சர்னிரோடு நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரைப்பார்த்து ரெயிலின் ஓட்டுனர் எச்சரிக்கை ஒலி எழுப்பினார். இதை கவனிக்காத பெண் தொடர்ந்து நடந்து சென்று கொண்டே இருந்தார். 

சுமார் 70 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்த அந்த ரெயில் சில நொடிகளில் அந்த பெண் மீது மோதிவிடும் நிலை ஏற்பட்டது.

 இதை உணர்ந்த ஓட்டுனர் திடீரென பிரேக்கை அழுத்தி சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தினார். ரெயிலும் அந்த பெண்ணுக்கு மிக அருகில் சென்று நின்றுவிட்டது. இதனால் மயிரிழையில் தப்பிய அந்த பெண்ணை நடைமேடையில் நின்றிருந்த பிற பயணிகள் மேலே தூக்கிவிட்டனர்.
இந்த சம்பவங்களை பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இது தற்போது வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரெயிலை ஓட்டிச்சென்ற ஓட்டுனர் சந்தோஷ் குமார் கவுதமை நேரில் அழைத்து பாராட்டினர். அவசர காலத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டதற்காக அவருக்கு பரிசு கொடுப்பது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர். 

Next Story