சசிகலா பொதுச்செயலாளர் ஆன விவகாரம் அ.தி.மு.க.விடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்கிறது


சசிகலா பொதுச்செயலாளர் ஆன விவகாரம் அ.தி.மு.க.விடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்கிறது
x
தினத்தந்தி 4 Feb 2017 11:15 PM GMT (Updated: 4 Feb 2017 10:30 PM GMT)

சசிகலா பொதுச்செயலாளர் ஆன விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.விடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது.

புதுடெல்லி,

சசிகலா பொதுச்செயலாளர் ஆன விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.விடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது.

பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா

தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து 29-ந் தேதி சென்னையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ‘அ.தி.மு.க. சட்டவிதி 20 பிரிவு 2-ல் கூறப்பட்டுள்ளது படி, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படும் வரை, வி.கே.சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நியமித்து இந்த பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது’ என அறிவிக்கப்பட்டது. அதன்படி சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனார்.

சசிகலா புஷ்பா எம்.பி., புகார்

இந்த தீர்மானத்தை தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க., அனுப்பி வைத்தது. தீர்மானம் தமிழில் இருந்ததால், அதை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ளவில்லை.

தீர்மானத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அனுப்புமாறு அ.தி.மு.க.வை தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது.

இதற்கிடையே சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனதை ஏற்காமல் சசிகலா புஷ்பா எம்.பி., தேர்தல் கமிஷனிடம் ஒரு புகார் அளித்தார்.

விளக்கம் கேட்பு

அதன்பேரில் அ.தி.மு.க.விடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு கடிதம் எழுதி உள்ளது. இதுபற்றி சசிகலா புஷ்பா எம்.பி., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த டிசம்பர் மாதம் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தபோது பொதுச்செயலாளர் பதவிக்கு என் கணவர் லிங்கேஸ்வர திலகன் மனு தாக்கல் செய்ய சென்றார். ஆனால் அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், போலீசாரும் என் கணவரை தடுத்து வேட்புமனு தாக்கல் செய்யவிடவில்லை. அவர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா நடராஜன் ஜனநாயகமற்ற முறையிலும், சர்வாதிகாரமாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நான் புகார் அளித்து இருந்தேன். இந்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டு, அ.தி.மு.க. தலைமைக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story