சட்டவிரோத செயல்களை தடுக்க செல்போன் பயன்படுத்துவோரின் விவரங்களை பதிவு செய்யுங்கள்
சட்டவிரோத செயல்களுக்கு சிம் கார்டுகளை பயன்படுத்துவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது
புதுடெல்லி,
நாடு முழுவதும் கோடிக்கணக்கான செல்போன்கள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், சட்டவிரோத செயல்களுக்கு சிம் கார்டுகளை பயன்படுத்துவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு லோக்நிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், என்.வி.ரமணா ஆகியோரை கொண்ட அமர்வு, நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்துவோரின் விவரங்களை பதிவு செய்யுமாறு மத்திய அரசை அறிவுறுத்தியது. செல்போன் வாடிக்கையாளர்கள் தங்கள் சிம் கார்டுகளுக்கு கொடுத்துள்ள விவரங்களை சரிபார்க்க தகுந்த வழிமுறை ஒன்றை உருவாக்குமாறும் மத்திய அரசை கேட்டுக்கொண்டது.
மேலும் செல்போன் வாடிக்கையாளரின் ஆதார் எண்ணை, அவர்களது செல்போன் எண்ணுடன் ஓராண்டுக்குள் இணைக்க உறுதியளிக்குமாறும் மத்திய அரசை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
செல்போன் எண்கள் தற்போது வங்கி நடைமுறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், செல்போன் வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ள விவரங்களை சரிபார்க்க வேண்டியது மிகவும் அவசியம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.