சத்தீஷ்கர் தாக்குதல் எதிரொலி: ஹோலி கொண்டாட்டத்தைத் துறந்தார் ராஜ்நாத் சிங்


சத்தீஷ்கர் தாக்குதல் எதிரொலி: ஹோலி கொண்டாட்டத்தைத் துறந்தார் ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 12 March 2017 10:43 AM GMT (Updated: 12 March 2017 10:43 AM GMT)

நக்சலைட்டுகள் தாக்குதல் காரணமாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஹோலி கொண்டாட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி,

சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் 12 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினால் இவ்வாண்டு நாளை நடைபெறவுள்ள ஹோலி கொண்டாட்டத்தைத் தவிர்க்க போவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதனை மத்திய உள்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டார்.

சட்டிஸ்கர் மாநிலத்தில் சுக்மா எனுமிடத்தில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தாக்குதலில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களது ஆயுதங்களும் கொள்ளையிடப்பட்டன. தலைநகரிலிருந்து 450 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கொட்டாச்சேறு எனும் கிராமத்தின் அருகிலுள்ள அடர்த்தியான வனப் பிரதேசத்தில் 112 மத்திய பாதுகாப்புப் படையினர் சாலை ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது காலை 9.15 மணியளவில் இத்தாக்குதல் நடைபெற்றது.

ராஜ்நாத் சிங் நேற்று ராய்பூருக்கு வருகை தந்து மரணமடைந்த வீரர்களுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார். தாக்குதல் கோழைத்தனமானது என்று வர்ணித்த ராஜ்நாத் சிங் அவர்களுடைய தியாகம் வீண் போகாது என்றும் குறிப்பிட்டார். மேலும் உயிரிழந்த வீரர்களின் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் குறைந்தபட்சம் ரூ ஒரு கோடியாவது நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story