வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு முழுவதுமாக தளர்வு


வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு முழுவதுமாக தளர்வு
x
தினத்தந்தி 13 March 2017 5:06 AM GMT (Updated: 13 March 2017 5:06 AM GMT)

வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு முழுவதுமாக இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக உயர்மதிப்புடைய பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் அறிவித்தது. இதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

ஆனால், தேவைக்கு ஏற்ப புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வராததாலும், சில்லறைத் தட்டுப்பாடு காரணமாகவும், ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தனர். தங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதனால், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்து இருந்தது. பின்னர் இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாதம் வெளியிட்ட அறிவிப்பில், பிப்ரவரி 20-ம் தேதி முதல் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.24,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்படும் எனவும், மார்ச் 13 ம் தேதியிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. அதன்படி இன்று முதல் கட்டுப்பாடுகள் முழுவதுமாக  தளர்த்தப்பட்டுள்ளது. 


Next Story