மத்திய அரசு மருந்தகங்களில் மலிவு விலை மருந்துகள் - மத்திய அரசு


மத்திய அரசு மருந்தகங்களில் மலிவு விலை மருந்துகள் - மத்திய அரசு
x
தினத்தந்தி 14 March 2017 11:58 AM GMT (Updated: 14 March 2017 11:57 AM GMT)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜன ஔஷதி மருந்தகங்களில் மருந்துகள் விலைக் குறைவாக கிடைக்கும் என்று மன்சுக் மாண்டாவியா தெரிவித்தார்.

புதுடெல்லி 

மத்திய அரசின் மூலம் 3000 கடைகள் நாடு முழுதும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல மக்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அமைச்சர், “ அரசு மருந்தாளுநர்களுக்கு ரூ.50,000 அளவில் கடையைத் துவங்க நிதியுதவி அளிக்கும். அத்துடன் ரூ10,000 மதிப்புள்ள மருந்துகளை வழங்கி உதவும். விற்பனைக்கு கமிஷனும் மருந்துகளோடு வழங்கப்படும்” என்றார்.

”சாமான்ய மனிதர்கள் மருந்து கிடைக்காமல் மரணமடையக் கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கம்” என்றார் அமைச்சர். வட கிழக்கு மாநிலத்தவர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், தன்னார்வக் குழுக்கள், சமூக சேவை நிறுவனங்கள், தனிப்பட்ட மருந்தாளுநர்கள் ஆகியோருக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கினார். துணைக்கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் பிராண்ட் செய்யப்பட்ட மருந்துகளின் தரத்திற்கு இக்கடைகளில் விற்கப்படும் மருந்துகளின் தரமும் இருக்கும் என்றார். அவை உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட தரக்கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் என்று விளக்கமளித்தார்.

தற்போது 600 வகையான மருந்துகள் இக்கடைகளில் கிடைக்கின்றன. முறையான டெண்டர்கள் மூலம் விலை மலிவாக மருந்துகள் கிடைக்க வழிசெய்யப்படும் என்றார் அமைச்சர். இதற்கான விநியோக வலையமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story