ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு கிடையாது


ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு கிடையாது
x
தினத்தந்தி 20 March 2017 10:30 PM GMT (Updated: 20 March 2017 8:43 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று பாராளுமன்றத்தில் பெட்ரோலியத் துறை மந்திரி கூறினார்.

புதுடெல்லி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று பாராளுமன்றத்தில் பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் கேள்வி

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களின் அனுமதியின்றி இந்த திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என்று உறுதி அளித்தன. இதனால் போராட்டத்தை நெடுவாசல் மக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளனர்.

இப்பிரச்சினை பாராளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. கேள்வி நேரத்தின்போது, வனரோஜா உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராயும் அசாம் மாநிலத்தில் பெட்ரோலிய ஆய்வு நடத்துவது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதாவது:–

பாதிப்பு கிடையாது

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது. இதனால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படவும் மாட்டார்கள். தமிழக பிரச்சினை தொடர்பாக நாளை(இன்று) ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும். இந்த வி‌ஷயத்தை பொறுத்தவரை விவசாயிகள் நலன் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் எவ்வித முரண்பாடும் இருக்கக்கூடாது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுகள் மற்றும் அவற்றை எடுப்பது தொடர்பானவற்றில் தவறான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. உள்நாட்டில் இதுபோன்ற சிறிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்வெளிகள் அனைத்தும் ஏற்கனவே உள்ள நடைமுறையின் அடிப்படையில்தான் அமைக்கப்படுகின்றன.

தேவை அதிகமாகிவிடும்

2024–ம் ஆண்டு நமக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை தற்போது உள்ளதை விட மேலும் பல மடங்கு அதிகமாகிவிடும். அப்போது ஐரோப்பிய நாடுகளின் ஒட்டுமொத்த தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு நமக்கு எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தேவைப்படும். இதனால் நாம் இறக்குமதிக்காக அதிகம் செலவிடவேண்டி இருக்கும்.

இதில் நாம் தன்னிறைவு பெறவேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். எனவே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இந்தியாவில் எடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் நமது இறக்குமதி தேவை வெகுவாக குறைந்துவிடும்.

கடந்த 2014–ம் ஆண்டில் இருந்து ராஜஸ்தான், குஜராத், அசாம் மாநிலங்களில் எண்ணெய் வளம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இதில் அசாமிலும், குஜராத்திலும் பெரும் அளவிற்கு எண்ணெய் கிணறுகள் உள்ளன என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story