டெல்லியில் 7 நாட்களாக நடைபெற்ற தமிழக விவசாயிகள் போராட்டம் வாபஸ்


டெல்லியில் 7 நாட்களாக நடைபெற்ற தமிழக விவசாயிகள் போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 21 March 2017 12:00 AM GMT (Updated: 20 March 2017 9:14 PM GMT)

பொன்.ராதாகிருஷ்ணன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

புதுடெல்லி

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, டெல்லியில் 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

விவசாயிகள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த 14–ந் தேதி முதல் போராட்டம் நடந்து வந்தது.

இந்த போராட்டம் நேற்று 7–வது நாளாக நடந்தது. நேற்றைய போராட்டத்தின் போது விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியபடி சங்கு ஊதிக்கொண்டே ஜந்தர் மந்தர் ரோட்டில் பேரணியாக சென்றனர்.

தம்பிதுரை

அப்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அ.தி.மு.க. பாராளுமன்றக்குழு தலைவர் வேணுகோபால் எம்.பி., அன்வர் ராஜா எம்.பி. உள்ளிட்டோர் அங்கு வந்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை சந்தித்து பேசினார்கள்.

பின்னர் மத்திய விவசாய அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வந்து, தமிழக விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக விவசாய மந்திரி ராதாமோகன் சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு எழுதிய கடிதத்தின் நகலை போராட்டக்குழுவினரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

மத்திய மந்திரி பேச்சுவார்த்தை

பின்னர் மத்திய கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, விவசாயிகளின் உணர்வுகளை தான் மிகவும் மதிப்பதாகவும் தன்னால் இயன்ற அளவு உதவி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கு போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, விவசாய மந்திரி ராதாமோகன் சிங்கை உடனடியாக அங்கு வரவழைத்து அவரிடம் இருந்து உறுதிமொழி கிடைத்தால் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக பொன்.ராதாகிருஷ்ணனிடம் கூறினார். உடனே பொன்.ராதாகிருஷ்ணன், இரு தினங்களுக்குள் விவசாயிகளின் பிரதிதிகள் விவசாய மந்திரியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது டெல்லி மேல்–சபை அ.தி.மு.க. உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் மற்றும் தே.மு.தி.க. டெல்லி மாநில தலைவர் ஜி.எஸ்.மணி ஆகியோரும் உடன் இருந்தனர்.

போராட்டம் வாபஸ்

அதன்பிறகு அய்யாக்கண்ணு, தன்னுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 75 விவசாயிகளுடன் தனியாக கலந்து ஆலோசித்தார்

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘‘மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் கேட்டுக்கொண்டதாலும், விவசாய மந்திரியிடம் அழைத்துச் சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதாக கூறுவதாலும் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். என்றாலும் ஒரு முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை நிறுத்திவிட்டு ஜந்தர் மந்தர் பகுதியிலேயே தங்கி இருப்போம்’’ என்று கூறினார்.


Next Story