பசு பாதுகாவலர்களுக்கு தடை பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பசு பாதுகாவலர்கள் குழுவிற்கு தடை கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க 6 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,
பசு பாதுகாவலர்கள் என கூறிக்கொள்பவர்களால் அவ்வபோது வன்முறையில் ஈடுபடுவதும், சர்ச்சையில் ஈடுபடுவதும் தொடர் சம்பவமாக உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பால் பண்ணைக்காக பசு வாங்கி சென்றவர்களை பசு பாதுகாவலர்கள் என்ற கும்பல் கொடூரமாக தாக்கியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையே பசு பாதுகாவலர்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக பதிலளிக்க பா.ஜனதா ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மராட்டியம், குஜராத், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது, மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
பசு பாதுகாவலர்கள் குழுவிற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு மே மாதம் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசு பாதுகாவலர்களால் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தினை எடுத்துரைத்தார். இம்மாநிலங்களில் நிலவும் சூழ்நிலையானது கவலையளிப்பதாக உள்ளது. அங்கு பசு பாதுகாவலர்கள் குழுவானது வன்முறையை தொடங்கி விடுகின்றன என வாதிட்டார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், 6 மாநிலங்களிடம் இருந்தும் சுப்ரீம் கோர்ட்டு பதில் கோரியதை அடுத்து மத்திய அரசு நோட்டீஸ் விடுக்கவில்லை என்றார்.
பசு பாதுகாவலர்கள் தலித்கள் மற்றும் சிறுபானமையினர் மீது வன்முறையை பிரயோக்கிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த வருடம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
Next Story