ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதி மற்றும் 10 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது


ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதி மற்றும் 10 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 9 April 2017 3:53 AM GMT (Updated: 9 April 2017 3:53 AM GMT)

ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதி மற்றும் 8 மாநிலங்களில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.


புதுடெல்லி,

டெல்லி மாநிலம் ராஜோரி கார்டன், ஜார்க்கண்ட் மாநிலம் லிதிபாரா, கர்நாடக மாநிலம் நஞ்சன்காடு மற்றும் குண்டுலுபேட்டை, ராஜஸ்தான் மாநிலம் தோபூர், மேற்கு வங்காள மாநிலம் கான்தி தஸ்கிம், மத்திய பிரதேச மாநிலம் அதேர் மற்றும் பந்தாவார்க், இமாச்சல பிரதேச மாநிலம் போராஞ், அசாம் மாநிலம் தேமாய் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதை அடுத்து அமைதியற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஆளும் கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியின் ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஹமீத் கார்ரா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அத்தொகுதி காலியானது. ஸ்ரீநகர் தொகுதியிலும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை காரணமாக ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது, இணையதள சேவை முடக்கப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பா.ஜனதாவிற்கே வாக்குப்பதிவு ஆகிறது என குற்றம் சாட்டப்பட்ட மத்திய பிரதேச மாநில தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாராளுமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 15-ம் தேதியும், சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதியும் நடக்கிறது.

Next Story