பசுவை தேசிய விலங்காக அறிவியுங்கள்: குஜராத் காங். சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்


பசுவை தேசிய விலங்காக அறிவியுங்கள்: குஜராத் காங். சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 April 2017 7:47 PM GMT (Updated: 11 April 2017 7:46 PM GMT)

குஜராத் சட்டமன்றக் காங்கிரஸ் உறுப்பினர் கியாசுதீன் ஷைக் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அகமதாபாத்

குஜராத் சட்டமன்றக் காங்கிரஸ் உறுப்பினர் கியாசுதீன் ஷைக் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பசுவதையை நாடு முழுதும் தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தனது அறிக்கை ஒன்றில் அவர், “ஏன் பாஜக பசுக்களை வெட்டுவதற்கு எதிராக ஆந்திரம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், மேற்கு வங்கம் மற்றும் கோவாவில் சட்டத்தைக் கொண்டுவராமல் இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.”இந்து மத நம்பிக்கைப்படி 33 கோடி தேவர்கள் பசுவின் உடலில் இருக்கிறபோது, அதை பாஜக தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றார்” ஷைக். 

அவர் பசுக்களை முன்வைத்து பாஜக சமூகத்தினை பிளவு படுத்தி வருகிறது என்று தாக்கியுள்ளார். பசுவதை முதன் முதலாக சிமன்பாய் படேல் அரசினால் குஜராத்தில் கொண்டு வரப்பட்டது என்றும், பாஜக அதை இதுவரை இரண்டு முறை திருத்தியுள்ளது ஆனால் அது பசுக்களுக்கு உதவவில்லை என்றார். குஜராத்தில் மேய்ச்சல் நிலங்களை பாஜக அரசு பெருந்தொழிலதிபர்களுக்கு விற்றுவிட்டது. இதனால் பசுக்கள் தெருக்களில் குப்பைகளை உண்டு வருகின்றன என்றார். பசு பராமரிப்புக் குடில்களுக்கு பாஜக அரசு நிதி எதையும் ஒதுக்கவில்லை. ஆனால் பிளவுவாத அரசியலுக்கு பசுவை பயன்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டினார்.

“இந்துக்களின் உணர்வுகளை மதித்து முஸ்லிம்கள் பசுவதையைக் கைக்கொள்வதில்லை. ஆனால் உணவுப் பொருட்களை (தாத்ரி மாட்டிறைச்சி விவகாரம்) பரிசோதனை செய்யாமலே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். இது இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது. பசுவின் பெயரால் மக்கள் கொல்லப்படுவது கடுமையானது. நமது அரசியல் சாசனம் விருப்பமான உணவை உண்ணவும், மதத்தைப் பின்பற்றவும் உரிமைக் கொடுத்துள்ளது. இஸ்லாமியர் பலர் பசுக்களை வளர்ப்பதில் ஈடுபடுகின்றனர். இதற்காக அவர்கள் மாநில அரசின் விருதுகளையும், சுவாமிநாராயணன் குருக்கள் போன்ற தனியார் அமைப்புக்களின் விருதுகளையும் பெற்றுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


Next Story