பாகிஸ்தானில் இந்திய ராணுவம் அழித்த பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட தொடங்கின


பாகிஸ்தானில் இந்திய ராணுவம் அழித்த பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட தொடங்கின
x
தினத்தந்தி 12 April 2017 1:21 PM GMT (Updated: 12 April 2017 1:20 PM GMT)

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் ‘சர்ஜிகல் ஸ்டிரைக்ஸ்’ நடத்திய பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டது என ராணுவம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய உரியில் இந்திய ராணுவ தலைமையகம் மீது பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23 தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அதிகாலையில் தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை முன்னெடுத்தது பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் என தெரிவிக்கப்பட்டது, ஆனால் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்றது. இதனையடுத்து தாக்குதல் நடத்தியதில் 17 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து எவ்வளவு எச்சரித்தும் கேட்காத பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடியை கொடுத்தது.

‘சர்ஜிகல் ஸ்டிரைக்ஸ்’ என்ற பெயரில் ராணுவத்தின் கமாண்டோ படை பிரிவு தாக்குதலுக்கு ஆயத்தமானது. செப்டம்பர் 29 தேதி இரவு 12.30 மணிக்கு (அதிகாலை) சுமார் 200 வீரர்கள் 8 குழுக்களாக பிரிந்து பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தனர். அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று அங்கிருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். விமானப்படை போர் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் இருந்தவாறு தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் மீது குண்டு மழை பொழிந்தன. பாராசூட்களில் இறங்கியும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தனர். இந்த அதிரடி தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் கூண்டோடு அழிக்கப்பட்டன. முதலில் 5 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. 

பின்னர் வெளியான தகவல் அடிப்படையில் 9 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் அதில் பதுங்கி இருந்த 40 முதல் 55 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மையை நீடித்திருக்க செய்ய பாகிஸ்தான் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை இந்தியாவிற்குள் அனுப்பி வருகிறது. இந்தியா பயங்கரவாதிகளை கைது செய்ததும் பாகிஸ்தான் எங்கள் நாட்டவர்கள் கிடையாது என்ற ஒற்றை கூற்றை கூறி இதுவரையில் ஏமாற்றி வருகிறது. இப்போது புதிய தகவலாக இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி இடத்தில் மீண்டும் பயங்கரவாத முகாம்கள் செயல்பட தொடங்கிவிட்டன.

பாராமுல்லா பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையின் 19வது பிரிவின் தலைவராக உள்ள மேஜர் ஜெனரல் ஆர்.பி. காலிதா பேசுகையில், உரி செக்டாருக்கு எதிராக உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மீண்டும் பயங்கரவாத முகாம்கள் செயல்பட தொடங்கிவிட்டன என கூறிஉள்ளார். உரி செக்டாரில் 100 கிலோ மீட்டர் தொலைவு நிற்கும் எல்லை பாதுகாப்பு படையினர் 19 வது பிரிவின் தலைவர் காலிதா பேசுகையில், “சர்ஜிகல் தாக்குதலை அடுத்து எங்களுக்கு கிடைத்த உளவுத்துறை தகவல்கள் அவர்கள் (பயங்கரவாதிகள்) மீண்டும் அவர்களுடைய நிலைக்கு திரும்பி உள்ளனர், குளிர் காலங்களில் பயங்கரவாத முகாம்கள் குறித்து தொடர்ச்சியாக உள்ளீடுகளை பெற்று வருகிறோம்,” என கூறிஉள்ளார் என என்.டி.டிவி. செய்தி வெளியிட்டு உள்ளது. 

எங்களுடைய பாதுகாப்பின் கீழ் உள்ள 100 கிலோ மீட்டர் தொலைவு பகுதியில் எதிர்புறம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9, 10 பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன என்பது எங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டு உள்ளார் காலிதா. 

Next Story