முடிந்தால் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்யுங்கள், தேர்தல் ஆணையம் நேரடியாக சவால்!


முடிந்தால் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்யுங்கள், தேர்தல் ஆணையம் நேரடியாக சவால்!
x
தினத்தந்தி 12 April 2017 1:51 PM GMT (Updated: 12 April 2017 1:50 PM GMT)

மின்னணு ஒட்டுப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேரடியாக சவால் விடுத்து உள்ளது.


புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக கேள்வி எழுப்பினர், இவ்வரிசையில் பிற எதிர்க்கட்சிகளும் கரம் கோர்த்தனர் மத்தியபிரதேசத்தில் பிந்த் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் செயல்விளக்கத்தின்போது எந்த பட்டனை அழுத்தினாலும் அது பா.ஜனதாவின் தாமரை சின்னத்தில் பதிவான சம்பவத்தினை அடுத்து. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திர தில்லுமுல்லு தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும்நிலையில் முறைகேடு என்பதை தேர்தல் ஆணையம் முற்றிலுமாக நிராகரித்து வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை இன்று சந்தித்த எதிர்க்கட்சிகள் இனி நடைபெற இருக்கும் இமாசல பிரதேசம், குஜராத் சட்டசபை தேர்தல் உள்ளிட்ட அத்தனை தேர்தல்களையும் வாக்குச் சீட்டு முறை மூலம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து உள்ளது.

மின்னணு ஒட்டுப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக கேள்விகள் எழுப்பட்டு வரும் நிலையில், எந்திரத்தை ஹேக் செய்வது தொடர்பாக நேரடியாக சவால் விடுத்து உள்ளது தேர்தல் ஆணையம். மே மாதம் தொடக்கம் முதல் நிபுணர்கள், விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுநர்கள் ஒரு வாரமோ அல்லது 10 நாட்களோ வந்து அவர்கள் மின்னணு ஒட்டுப்பதிவு எந்திரங்களை ஹேக்கிங் செய்ய முயற்சி செய்யலாம்,” என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. சவாலை நிறைவேற்ற ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள் என தேர்தல் ஆணையம் கூறிஉள்ளது. 

இதுபோன்ற சவாலை கடந்த 2009-ம் ஆண்டும் தேர்தல் ஆணையம் விடுத்தது. ஆனால் யாராலும் மின்னணு ஒட்டுப்பதிவு எந்திரத்தை ஹேக்கிங் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story