பதன்கோட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமானோர் நகர்வு, போலீஸ் சோதனையை தொடங்கியது


பதன்கோட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமானோர் நகர்வு, போலீஸ் சோதனையை தொடங்கியது
x
தினத்தந்தி 3 May 2017 10:21 AM GMT (Updated: 3 May 2017 10:20 AM GMT)

பதன்கோட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமானோரை தேடும் வேட்டையில் அம்மாநில போலீஸ் ஈடுபட்டு உள்ளது.

பதன்கோட்,


பஞ்சாப் மாநிலம் பதன்கோட் பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட காரில் சென்ற மூன்று பேரை காணவில்லை. குறிப்பிட்ட கார் பெர்காம்பூர் பகுதியில் சோதனை சாவடியை கடந்தபோது நிறுத்த உத்தரவிடப்பட்டது, ஆனால் கார் நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து போலீசார் காரை பின்தொடர்ந்து போலீஸ் சென்றது. அப்போது கார் மாகான்பூர் பகுதியில் அநாதையாக விடப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக பதன்கோட் எஸ்.எஸ்.பி. விவேக் ஷீல் சோனி பேசுகையில் எஸ்யுவி கார் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா பகுதியில் நேற்று உரிமையாளரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இதனையடுத்து சந்தேகத்திற்கு இடமானோரை நாங்கள் தேடிவருகிறோம், என கூறிஉள்ளார். 

காரை சோதனை செய்தபோது அதில் சந்தேகத்திற்கு இடமாக எந்தஒரு பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆனால் குறிப்பிட்ட காரும் போலியான பதிவு எண்ணை கொண்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூன்று பேரும் ராணுவம் அல்லது போலீஸ் போன்று ஆடை அணிந்திருக்கவில்லை எனவும் போலீஸ் தரப்பில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு குர்தாஸ்பூரில் இதுபோன்றுதான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் காரை கடத்தி தினாநகர் காவல் நிலையம் சென்று தாக்குதல் நடத்தினர், இதில் 7 போலீசார் கொல்லப்பட்டனர். பின்னர் நீண்ட நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கடந்த வருடம் ஜனவரி முதலில் பாகிஸ்தானை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் பதன்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது 7 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு எல்லையில் பாதுகாப்பு அதிஉயர் உஷார் படுத்தப்பட்டது. 

Next Story