கோவில் திருவிழாவில் மதம் பிடித்த யானை கல்லை தூக்கி வீசியதில் பாகன் பலி


கோவில் திருவிழாவில் மதம் பிடித்த யானை  கல்லை தூக்கி வீசியதில் பாகன் பலி
x
தினத்தந்தி 3 May 2017 3:10 PM GMT (Updated: 3 May 2017 3:10 PM GMT)

கேரளாவில் கோவில் திருவிழாவில் யானை ஒன்று கல்லை தூக்கி வீசியதில் காயமடைந்த அதன் பாகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கம்.  இந்நிலையில், கேரளாவின் பாலக்காடு பகுதியில் ஆலத்தூர் என்ற இடத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன் கோவில் திருவிழா ஒன்று நடந்துள்ளது.  இதில் யானைகளும் பங்கேற்றன.

இந்த நிலையில், யானை ஒன்று திடீர் என மதம் பிடித்து திமிறியது.  அது சிறிது தூரம் ஓடி அங்கிருந்த கல் ஒன்றை துதிக்கையால் எடுத்தது.  அதன்பின் 49 வயது நிறைந்த தனது பாகன் மீது வீசியுள்ளது.  இதில் காயமடைந்த யானை பாகன் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதன்பின் கோட்டயம் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்ற அவர் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.  கேரளாவில் கோவில் திருவிழாவில் யானைகளுக்கு மதம் பிடித்து பாகன்கள் கொல்லப்படுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

திருவிழாவில் கலந்து கொள்ளும் ஆண் யானைகள் மதம் பிடிக்கும்பொழுது ஆக்ரோசத்துடன் நடந்து கொள்ளும்.  அந்நேரத்தில் அதன் இனப்பெருக்க ஹார்மோன்களின் அளவு அதிகரித்திடும்.

கடந்த 10 நாட்களில் திருவனந்தபுரம், பரசாலா மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பாகன்கள் யானைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

கோவில் திருவிழாக்களில் இந்த வருடம் ஜனவரியில் இருந்து இதுவரை 10 யானைகள் இறந்துள்ளன.

Next Story