உத்தரபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவு ஏஜெண்டு கைது
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டு என்று அறியப்படுபவர், அப்தாப் அலி.
லக்னோ,
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டு என்று அறியப்படுபவர், அப்தாப் அலி. இவர் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள பைசாப்பூரில் பதுங்கி உள்ளதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று மாநில பயங்கரவாத தடுப்பு படையினர், ராணுவ உளவு அமைப்பினர், மாநில உளவு அமைப்பினர் ஆகியோர் அங்கு விரைந்து சென்று, அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அப்தாப் அலி, பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. அமைப்பிடம் பயிற்சி பெற்றவர் என நம்பப்படுகிறது. பாகிஸ்தான் தூதரகத்துடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்திருக்கிறார்; இதற்கான முக்கிய ஆதாரம் சிக்கி உள்ளது என பயங்கரவாத தடுப்பு படை ஐ.ஜி. அசீம் அருண் தெரிவித்தார்.
அப்தாப் அலி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் பயங்கரவாத தடுப்பு படையினரிடம் சிக்கி உள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.