மாலேகாவ் குண்டுவெடிப்பு: தேசிய புலனாய்வு பிரிவு, மராட்டிய அரசு பதிலை கோரியது சுப்ரீம் கோர்ட்டு


மாலேகாவ் குண்டுவெடிப்பு: தேசிய புலனாய்வு பிரிவு, மராட்டிய அரசு பதிலை கோரியது சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 5 May 2017 8:29 AM GMT (Updated: 5 May 2017 8:29 AM GMT)

மாலேகாவ் குண்டுவெடிப்பில் பிரசாத் புரோகித் மனு தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு, மராட்டிய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

நாசிக் மாவட்டம் மாலேகாவில் கடந்த 2008–ம் ஆண்டு செப்டம்பரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில், 6 பேர் பலியானார்கள். சுமார் 100 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக பெண் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் மற்றும் முன்னாள் லெப்டிணன்ட் ஜெனரல் பிரசாத் புரோகித் உள்ளிட்டோரை தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், 44 வயது சாத்வி பிரக்யா தாக்குரும், பிரசாத் புரோகித்தும் ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ரஞ்சித் மோரே மற்றும் ஷாலினி பன்சால்கர் ஜோஷி ஆகியோர் முன்பு 25-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குரை ரூ.5 லட்சம் சொந்த ஜாமீனில் விடுவித்தனர். மேலும், அவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தேவைப்படும் போது அவர்கள் முன்பு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

அதேசமயம், பிரசாத் புரோகித் மீதான குற்றச்சாட்டின் தீவிரத்தை மேற்கோள்காட்டி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனையடுத்து பிரசாத் புரோகித் சார்பில் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இதுதொடர்பாக மராட்டிய அரசு மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பிரசாத் புரோகித்திற்கு எதிராக அனைத்து ஆவணங்களும் உள்ளது என தேசிய புலனாய்வு பிரிவு கூறிகிறது. ஆனால் தேசிய புலனாய்வு பிரிவு சில குற்றவாளிகளை விடுவிப்பதில் குறிப்பிட்டவர்களை தேர்வு செய்கிறது, என்னை பலியாடாக மாற்றிவிட்டது எனவும் குற்றம் சாட்டிஉள்ளார் பிரசாத் புரோகித்.


Next Story