காஷ்மீர் வங்கியில் கொள்ளையடித்த பயங்கரவாதிகள் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு
காஷ்மீர் வங்கியில் கொள்ளையடித்த பயங்கரவாதிகள் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு என போலீசார் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர். விசாரணையில் வங்கியில் கொள்ளையடித்த பயங்கரவாதிகள் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஷகீர் அகமது, ஷபீர் அமத் தார், முகமது அஷ்ரப், ஆரிப் நபி தார் ஆகியோர் என தெரியவந்தது.
இதையடுத்து வங்கி கொள்ளையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 4 பேர் குறித்து துப்புகொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்து உள்ளனர். மேலும் அந்த பயங்கரவாதிகள் 4 பேரின் புகைப்படங்களை புல்வாமா மாவட்டம் முழுவதும் ஒட்டி போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்னதாக குல்காம் மாவட்டத்தில் ஒரு வேனை மறித்து போலீசார் உள்பட 7 பேரை சுட்டுக்கொன்ற ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி உமர் மஜித் என்பவரின் தலைக்கு போலீசார் ரூ.10 லட்சம் பரிசு அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story