கணவர் நிலம் வாங்கியதில் முறைகேடு? நில அபகரிப்பு சர்ச்சையில் ஸ்மிரிதி இரானி


கணவர் நிலம் வாங்கியதில் முறைகேடு? நில அபகரிப்பு சர்ச்சையில் ஸ்மிரிதி இரானி
x
தினத்தந்தி 5 May 2017 11:00 PM GMT (Updated: 5 May 2017 8:16 PM GMT)

மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியின் கணவரான சுபின் பரிதூன் இரானி மத்திய பிரதேசத்தின் குச்வாகி கிராமத்தில் உள்ள கம்பெனி ஒன்றின் இயக்குனராக உள்ளார்.

போபால்

மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியின் கணவரான சுபின் பரிதூன் இரானி மத்திய பிரதேசத்தின் குச்வாகி கிராமத்தில் உள்ள கம்பெனி ஒன்றின் இயக்குனராக உள்ளார். அந்த கிராமத்தில் ஹசாரி பானி என்பவருக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலம் இருந்தது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திடீரென காணாமல் போய்விட்டார்.

எனவே அந்த நிலத்தை யாரும் உரிமை கோராததால் அங்குள்ள அரசு பள்ளிக்கு அந்த நிலத்தை ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் அந்த நிலத்தை ராம்சுமேர் சுக்லா என்பவர் மோசடி செய்து விற்றுவிட்டார். அதை சுபின் இரானி வாங்கியுள்ளதாக தெரிகிறது. தற்போது அந்த நிலத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பள்ளித்தலைமை ஆசிரியர் ஜானகி பிரசாத் திவாரி, உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தால் ஸ்மிரிதி இரானிக்கு எதிராக நில அபகரிப்பு சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக இந்த நிலத்தை கடந்த 30–ந்தேதி அவர் பார்வையிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story