மாட்டிறைச்சி விவகாரம்; படுகொலைகளுக்கு எதிர்ப்பு வலுக்கிறது இந்தியா முழுவதும் போராட்டம் தொடங்கியது


மாட்டிறைச்சி விவகாரம்; படுகொலைகளுக்கு எதிர்ப்பு வலுக்கிறது இந்தியா முழுவதும் போராட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 28 Jun 2017 2:50 PM GMT (Updated: 28 Jun 2017 2:50 PM GMT)

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் கும்பல் தாக்குதலுக்கு எதிர்ப்பு வலுத்து இந்தியா முழுவதும் போராட்டம் தொடங்கி உள்ளது.


புதுடெல்லி,

அரியானா மாநிலத்தில் டெல்லி-மதுரா பயணிகள் ரெயிலில் கடந்த வியாழனன்று 3 முஸ்லிம் சகோதரர்களை 20-25 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கியதில் ஜுனைத் என்ற 17 வயது இளைஞர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து பரிதாபாத்தில் உள்ள கந்தவாலி கிராமத்தில் ஜுனைத் குடும்பத்தினர் மட்டுமல்லாது கிராம முஸ்லிம் சமுதாயமே கறுப்புப் பட்டை அணிந்து ஈத் பண்டிகையை கண்ணீருடனும் துக்கத்துடனும் அனுசரித்தனர். அதாவது நமாஸ் மட்டும் செய்த முஸ்லிம்கள், ஈத் பண்டிகையைக் கொண்டாடவில்லை.

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என தடை விதித்தும், மாடு வாங்கல், விற்றலை ஒழுங்குபடுத்தியும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ‘மிருகவதை தடை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள்- 2017’ என்ற தலைப்பில் அறிவிக்கை வெளியிட்டது. 

பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களும் பசு வதைக்கு எதிராக கடுமையாக தண்டிக்கும் சட்டங்களை கொண்டு வந்து உள்ளது.

 இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆர.எஸ்.எஸ். கொள்கையை நாடு முழுவதும் மக்களிடம் திணிக்க முயற்சி செய்கிறது, இஸ்லாமியர்கள் மற்றும் தலித் பிரிவினர் இலக்காக்கப்படுகின்றனர் என கடுமையாக சாடி வருகின்றன. சிறுவன் ஜுனைத் படுகொலை செய்யப்பட்டம் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது.

மாட்டிறைச்சி விவகாரத்தில் கும்பல் தாக்குதல்களுக்கு எதிராக #Notinmyname (எங்களின் பெயரில் தாக்குதல்களை நடத்தாதே) என்னும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.திரைப்பட இயக்குநர் சபா தேவன் தனது ஃபேஸ்புக் பதிவில் தொடங்கிவைத்த இந்த ஹேஷ்டேகில், பலரும் தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தியா டுடே செய்தி நெறியாளரான ராஜ்தீப் சர்தேசாய், தனது ட்விட்டர் தளத்தில், ”எந்த மதத்தைச் சேர்ந்த எந்த குடிமகன் குறிவைத்து தாக்கப்பட்டாலும் அதற்கு எதிரானது இந்த பிரச்சாரம்” எனப் பதிவிட்டார். 

பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதரின் ட்விட்டர் பதிவில், ”அக்லக்கிற்காக ஓங்கிய சத்தம், ஜுனைத்தின் விஷயத்தில் குறைந்த எதிரொலியாக உள்ளது. தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றிணையுங்கள். குரல் கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

எங்கு தாக்குதல் நடந்தாலும் அதற்கு இந்து அமைப்புகளைக் குறை சொல்லக்கூடாது என்னும் ரீதியிலும், இந்துக்களை நோக்கிய வெறுப்புப் பிரச்சாரம் என்ற ரீதியிலும் இதே ஹேஷ்டேகில் கருத்துக்கள் பகிரப்பட்டது. இது தொடர்பாக நாடு முழுவதும் இன்று முக்கிய நகரங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இந்தியா முழுவதும் படுகொலைக்கு எதிராக போராட்டம் தொடங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி லண்டன், கனடாவிலும் போராட்டம் நடக்கிறது.

ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, லக்னோ உள்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் Notinmyname என பாதகையை தாங்கிய வண்ணம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். லக்னோவில் போராட்டம் நடத்தியவர்கள் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். பசு பாதுகாவலர்கள் என கூறிக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவர்களை மத்திய அரசு பாராட்டுகிறது என சாடிஉள்ளனர். மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடற்கரையில் கொட்டும் மழைக்கு இடையே போராட்டம் நடைபெற்றது. மதத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவது அவமதிப்பதாகும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். 

ஐதராபாத்திலும் போராட்டம் நடைபெற்றது. பெங்களூருவிலும் போராட்டம் நடைபெற்றது. திரைஉலக பிரபலங்களும் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். மும்பையில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலிலும் போராட்டம் நடைபெற்றது.டெல்லி ஜந்தர் மந்தரில் சுமார் 2000த்திற்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பீகார் மாநிலம் பாட்னாவிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு டெல்லி துணை மந்திரி மணிஷ் சிசோடியா ஆதரவு தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று மாட்டிறைச்சி விவகார படுகொலைக்கு எதிராகவும் சமூக வலைதளமாக போராட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.


Next Story