நாட்டின் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்துக்கொள்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு


நாட்டின் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்துக்கொள்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Jun 2017 2:55 PM GMT (Updated: 28 Jun 2017 2:55 PM GMT)

மோடி அரசு தேசிய பாதுகாப்பிலும், இறையாண்மையிலும் சமரசம் செய்து கொள்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுடெல்லி

அமெரிக்க அரசு சையத் சலாஹூதீன் மீதான ஆணையில் ‘இந்தியாவினால் நிர்வகிக்கப்படும் ஜம்மு - காஷ்மீர்’ என்று குறிப்பிட்டுள்ளது. இதை ஏன் இதுவரை யாரும் கண்டிக்கவில்லை? பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்த போதே இதற்கான கண்டனத்தை தெரிவிக்காமல் மௌனமாக இருந்தது ஏன் என்று அக்கட்சி கூறியுள்ளது. 

இது பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலர் குலாம் நபி ஆசாத் “அமெரிக்க அரசின் ஆணை அதிர்ச்சி தருவதாக உள்ளது; இது தேசிய பாதுகாப்பிலும், இறையாண்மையிலும் சமரசமாகும்’ என்று கூறினார். பாஜக ஏன் மௌனமாக இருக்கிறது? இது நாட்டின் நலனை விற்பதாகாதா?” என்று கேட்டார் ஆசாத்.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது. மோடிக்கும் அவரது கட்சிக்கும் இந்த விஷயம் விவாதத்திற்குரியது என்றாலும் கூட அவ்வாறுதான் இருக்கிறது என்ற ஆசாத், “எவ்வளவுதான் நெஞ்சுயர்த்தி பெருமை பேசினாலும் அரசு தனது சமரசத்தை மறைக்க இயலாது” என்றார்.

தீவிரவாதத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது. கூட்டு முயற்சியில் அதை ஒழிக்க முயல வேண்டும்; அதுவும் பாகுபாடற்ற வகையில் இருக்க வேண்டும் என்றார் ஆசாத்.


Next Story