சட்டவிரோத பணபரிமாற்றம்: பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 7 ஆண்டுகள் ஜெயில்


சட்டவிரோத பணபரிமாற்றம்: பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 7 ஆண்டுகள் ஜெயில்
x
தினத்தந்தி 26 July 2017 3:07 AM GMT (Updated: 26 July 2017 3:07 AM GMT)

சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டம் 2002–ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இது 2005–ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க முடியும். இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி முகமது கோயா சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கினார். இந்த வழக்கு கர்நாடக கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதாக அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இது குறித்து அமலாக்க பிரிவு அதிகாரிகள் மேலும் கூறுகையில், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஏற்கனவே ஜார்கண்ட் முன்னாள் மந்திரி ஹரி நாராயணன் ராய்க்கு, ராஞ்சி கோர்ட்டு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது. இதையடுத்து அலாவுதீன் என்பவருக்கு கொல்கத்தா கோர்ட்டு தண்டனை அளித்தது. அதன் பிறகு தற்போது 3–வது நபராக தற்போது முகமது கோயாவுக்கு இந்த வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது என்றனர்.

Next Story