நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறுவோம் எடப்பாடி பழனிசாமி பேட்டி


நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறுவோம் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 12 Aug 2017 12:00 AM GMT (Updated: 11 Aug 2017 8:52 PM GMT)

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் அளித்த பேட்டியில் கூறினார்.

புதுடெல்லி,

மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறுவோம் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் அளித்த பேட்டியில் கூறினார்.

புதிய துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு, டெல்லியில் நேற்று பதவியேற்றார். இந்த விழாவில், தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டு விட்டு, பிரதமர் நரேந்திர மோடியை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினர்.

இதையடுத்து தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டு விட்டு, பிற்பகலில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறோம்’’ என்றார்.

இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– ‘நீட்’ தேர்வு குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து, தமிழ்நாடு மட்டும் ஏன் இப்படி தொடர்ந்து எல்லா மாநிலங்களிலிருந்தும் விலக்காக இருக்கிறீர்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறீர்கள்?

பதில்:– சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எனக்கு தெரியவில்லை. இப்பொழுதுதான் நான் பிரதமரை சந்தித்து வந்திருக்கிறேன். அதுகுறித்து முழுவதுமாக தெரிந்தபிறகு தான் பதில் கூறமுடியும்.

கேள்வி:– உங்கள் தரப்பினரை டி.டி.வி.தினகரன் ‘420’ என்று சொல்லி இருக்கிறார். அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்? (420 என்பது மோசடி குற்றத்துக்கான இந்திய தண்டனை சட்டப்பிரிவு ஆகும்)

பதில்:– 420 என்று குறிப்பிட்டது அவருக்குத்தான் பொருந்தும் என்று கருதுகிறேன். ஏனென்றால் 3 மாத நிலையை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அதற்கு யார் பொருத்தம் என்றால், அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று கருதுகிறேன்.

கேள்வி:– அணிகள் இணைப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:– இது தொடர்பாக இன்னும் எங்கள் தரப்பிலும் சரி, அவர்கள் தரப்பிலும் சரி, பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை. இணையும் என்று நம்புகிறோம்.

கேள்வி:– பிரதமர் மோடியை சந்தித்து என்ன பேசினீர்கள்?

பதில்:– ‘நீட்’ தேர்வை பற்றித்தான் நான் பேசியிருக்கிறேன்.

கேள்வி:– நம்முடைய பாடத்திட்ட அடிப்படையிலே ‘நீட்’ தேர்வு ஏன் கேட்கக்கூடாது?

பதில்:– அதாவது ‘நீட்’ தேர்வு அறிவிக்கப்பட்டு நடைபெற்றுவிட்டது. ஆகவே, நாங்கள் ஜெயலலிதா இருக்கும்பொழுதே சட்டமன்றத்தில் தமிழகத்தில் ‘நீட்’ தேர்விற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று சட்டமசோதா நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். அது நிலுவையில் இருக்கிறது. அதனால், பிரதமரை சந்தித்து, அதற்கு வடிவம் கொடுத்து தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறோம்.

கேள்வி:– உங்கள் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே?

பதில்:– அவர் ஏற்கனவே எங்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். அதில் நாங்கள் வெற்றி பெற்றோம். பிறகு, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். அதிலும் ஒரு ஓட்டு கூடுதலாக பெற்று வெற்றி பெற்றோம். இப்பொழுதும் கொண்டுவந்தால், நிச்சயமாக அதிக ஓட்டு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.


Next Story