கோரக்பூர் மருத்துவமனை உயிரிழப்புக்கள், 7 மாதங்களாக எச்சரிக்கை விடுத்த ஆக்ஸிஜன் நிறுவனம்


கோரக்பூர் மருத்துவமனை உயிரிழப்புக்கள், 7 மாதங்களாக எச்சரிக்கை விடுத்த ஆக்ஸிஜன் நிறுவனம்
x
தினத்தந்தி 13 Aug 2017 6:08 AM GMT (Updated: 13 Aug 2017 6:08 AM GMT)

60-க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டு உள்ள கோரக்பூர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு 7 மாதங்களாக ஆக்ஸிஜன் நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

கோரக்பூர், 

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு குழந்தைகள் நலப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, புதிதாக பிறந்த குழந்தைகள் உள்பட 60 குழந்தைகள் கடந்த 5 நாட்களில் உயிரிழந்தன. குழந்தைகள் உயிரிழந்தது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த மருத்துவமனைக்கு திரவ ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த தனியார் நிறுவனத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.69 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பதால் கடந்த 4–ந் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை அந்த நிறுவனம் நிறுத்தி உள்ளது. 

இதனால் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகதான் உயிரிழப்பு ஏற்பட்டது என்பதை மாநில அரசு தரப்பு மறுக்கிறது. இவ்விவகாரத்தில் மாநில அரசு பல்வேறு நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 7 மாதங்களாக சப்ளையை நிறுத்திவிடுவோம் என தனியார் ஆக்ஜிஸன் நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது தெரியவந்து உள்ளது. 

“திரவ ஆக்ஸிஜன் வினியோகித்து வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையானது 6-வது மாதத்தை எட்டிஉள்ளது, இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாக கால தாமதம் ஏற்பட்டால் இதற்கு முழு பொறுப்பும் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்துடையதுதான்.”

 “எங்களால் தொடர்ச்சியாக சப்ளை செய்ய முடியவில்லை... நிலுவைத்தொகை காரணமாக... இது எங்களுடைய பொறுப்பாக இருக்க முடியாது,” என மருத்துவமனை நிர்வாகத்திற்கு புஸ்பா சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் அனுப்பிய இரு கடிதங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆகஸ்ட் வரையில் தொடர்ச்சியாக நிறுவனம் நிலுவைத் தொகையை தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி உள்ளது. இந்த கடிதங்கள் அனைத்தும் தனியார் நிறுவனத்தின் கோரக்பூர் பிராந்திய மானேஜர் சர்மாவால் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அனுப்பட்டு உள்ளது. ஜூலை 31-ம் தேதி இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தனியார் நிறுவனம் தரப்பில் வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் பதிலளிக்கப்படவில்லை என்றும் தி சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சர்மா கூறிஉள்ளார். 

ஒப்பந்தத்தின்படி தொகையானது 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும், செலுத்தப்பட வேண்டிய தொகையானது ரூ.10 லட்சத்தை தாண்ட கூடாது. எங்களுக்கு நவம்பர் 2016-ல் இருந்து மருத்துவ நிர்வாகம் தரப்பில் பணம் தர வேண்டியது இருந்தது,  மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் குறிப்பிட்ட தொகையானது செலுத்தப்பட்டது. ஆனால் மனித நேயத்தின் அடிப்படையில் நாங்கள் தொடர்ச்சியாக 9 மாதங்கள் ஆக்ஸிஜன் வழங்கி வந்தோம். கடைசியாக, நாங்கள் ஆக்ஜிஸின் வாங்கும் இடங்களுக்கு பணம் வழங்க எங்களிடம் பணம் கிடையாது, என் கூறிஉள்ள சர்மா ஆகஸ்ட் 4-ம் தேதி வரையில் நாங்கள் ஆக்ஜிஸின் சப்ளை செய்தோம் என குறிப்பிட்டு உள்ளார். மூன்று மாதங்கள் கழித்த பின்னர், நாங்கள் பிப்ரவரி 2017-ல் முதல் கடிதத்தை மருத்துவ நிர்வாகத்திற்கு அனுப்பினோம். அப்போது மருத்துவ நிர்வாகம் தரவேண்டிய தொகையானது ரூ. 42 லட்சமாக இருந்தது. தொடர்ந்து மருத்துவ நிர்வாகத்தை நாங்கள் நினைவுபடுத்தி வந்தோம். ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகஸ்ட் என நாங்கள் தொடர்ச்சியாக எங்களுடைய நிலையை மருத்துவ நிர்வாகத்திடம் தெரிவித்து வந்தோம், எங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையானது உயர்ந்து கொண்டு செல்கிறது, எனவே ஆக்ஸிஜன் சப்ளையை உறுதி செய்ய எங்களுக்கு கடினமான நிலையாக உள்ளது என்று. அப்போது மொத்த தொகையானது ரூ. 60 லட்சமாகும் என குறிப்பிட்டு உள்ளார் சர்மா. 

கடந்த வெள்ளிக்கிழமை மாலை உயிரிழப்புகள் குறித்தான செய்திகள் வெளியானதும் மருத்துவ நிர்வாகம் ரூ. 20 லட்சத்தை நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது. இப்போது இன்னும் ரூ. 40 லட்சம் வழங்கப்பட உள்ளது.

“திரவ ஆக்ஸிஜன் வினியோகித்து வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையானது 6-வது மாதத்தை எட்டிஉள்ளது, இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாக கால தாமதம் ஏற்பட்டால் இதற்கு முழு பொறுப்பும் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்துடையதுதான்.” என தனியார் நிறுவனம் கடந்த ஜூலை 18-ம் தேதி மருத்துவமனைக்கு கடிதம் எழுதி உள்ளது. இந்த கடிதத்தின் நகலானது கோரக்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட்டிற்கும் அனுப்பப்பட்டு உள்ளது. எங்களுடைய நிறுவனம் ராஜஸ்தானில் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கிதான் ஆக்ஸிஜன் வழங்கி வருகிறது எனவும் சர்மா கூறிஉள்ளார். 

Next Story