கோரக்பூர் துயரம்: எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் காபீல் கான்


கோரக்பூர் துயரம்: எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் காபீல் கான்
x
தினத்தந்தி 13 Aug 2017 6:49 AM GMT (Updated: 13 Aug 2017 6:48 AM GMT)

கோரக்பூரில் 60-க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்ட மருத்துவமனையில் மருத்துவர் காபீல் கான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளார்.

கோரக்பூர்,

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையையும் நடைபெற்று வருகிறது. மருத்துவமனைக்கு திரவ ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த தனியார் நிறுவனத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.69 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பதால் கடந்த 4–ந் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை அந்த நிறுவனம் நிறுத்தி உள்ளது. 

மருத்துவமனையில் மிகவும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்ட போது என்சிபாலிட்டிஸ் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் காபீல் கான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளார். மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதித்து துடித்த பெற்றோர்கள் நேற்று மாலையில் பேசுகையில் டாக்டர் காபீல் கான் மட்டும் சரியான நேரத்தில் துரிதமாக பணியை செய்யவில்லை என்றால் கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையானது 36க்கும் அதிகமாகியிருக்கும் என கூறிஉள்ளனர். 

ஆகஸ்ட் 10-ம் தேதி இரவு மருத்துவ கல்லூரியின் மைய ஆக்ஸிஜன் பைப் லைனின் எச்சரிக்கை ஒலியானது நின்றுவிட்டது. இது ஆக்ஸிஜன் சப்ளை நிற்கப்போகிறது என காட்டிஉள்ளது. இதனையடுத்து டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவசரகால ஆக்ஸிஜன் சிலிண்டரை கொண்டு நிலையை சமாளிக்கலாம் என முடிவு செய்து உள்ளனர். இரண்டு மணிநேரங்களுக்குதான் தாக்குபிடிக்கும் என அவர்களுக்கு தெரியும். பின்னர் என்ன செய்வது என அவர்களுக்கு தெரியவில்லை.

தடையில்லா ஆக்ஜிஸன் சப்ளை மட்டுமே பாதிக்கப்பட்ட (என்சிபாலிட்டிஸ், மூளையில் ஏற்படும் வீக்கம்) குழந்தைகளுக்கு உயிர்காக்கும் மருத்துவம் என தெரிந்த மருத்துவர் காபீல் கான் துரிதமாக செயல்பட்டு உள்ளார். இதற்கிடையே மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வழங்கும் நிறுவனத்திற்கு பலதரப்பும் அழைப்பு விடுத்து உள்ளது. எதிர்தரப்பில் இருந்து பணம் செலுத்தப்பட்ட பின்னர்தான் சப்ளையை உறுதிசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு விட்டது. பிற ஆக்ஸிஜன் சப்ளை நிறுவனங்களும் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அனுப்ப தயாராக இல்லை. ஆனால் கான் தன்னுடைய நம்பிக்கையை இழக்கவில்லை. இரவில் தனக்கு உதவியாக இரு பணியாளர்களை அழைத்துக் கொண்டு தன்னுடைய காரில் அவருடைய நண்பர் நடத்தும் மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அங்கிருந்து மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கடனாக பெற்று உடனடியாக மருத்துவமனை திரும்பி உள்ளார். 

காரில் புறப்பட்டதுமே முன்கூட்டியாக எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஜூனியர் டாக்டர்களிடம் பேசிய வண்ணம் செய்து உள்ளார். 

குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய சிகிச்சை முறை, நடைமுறைகளை விளக்கி உள்ளார். காரில் கொண்டு சென்ற ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மத்திய ஆக்ஸிஜன் குழாயில் இணைத்து உள்ளார். இதனால் குறைந்த நேரம் மட்டுமே பலன் அளிக்கும் என்ற நிலையில் அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என யோசித்து உள்ளனர். காலை 6 மணியளவில் பல்வேறு குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே காரில் வெளியே சென்று தனக்கு தெரிந்த மருத்துவமனைகளில் ஆக்ஜிஸன் சிலிண்டர்களை பெற கான் முயற்சி செய்து உள்ளார். அவ்வாறு 12 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சேகரித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார். தன்னுடைய வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று அன்று முழுவதும் காரில் உதவி கிடைக்கும் இடம் நோக்கி சென்று உள்ளார். அவர் மருத்துவமனைக்கு அவசரமாக செய்த உதவியை அடுத்து உள்ளூர் சப்ளையர் பணம் வழங்கினால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்குவதாக கூறிஉள்ளார். 

தன்னுடைய ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிவருமாறு தன்னுடைய மருத்துவமனை ஊழியரிடம் கொடுத்து உள்ளார். இதற்காக செய்யப்பட்ட அனைத்து செலவுகளையும் ஏற்று முன்நின்று கடைசி நேரத்தில் போராடி கான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார். மருத்துவமனையில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த திரிபாதி பேசுகையில், “மற்ற டாக்டர்கள் நம்பிக்கையை இழந்த போது கான் மற்றும் போராடி தனியார் மருத்துவமனைகளில் இருந்து சிலிண்டர்களை வாங்கிவந்தார். அவர் பல்வேறு குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளார், அவர் எப்போதும் எல்லோருடைய மனதிலும் நிற்பார்,” என கண்ணீர் மல்க கூறினார். 


Next Story