குற்றவாளிகள் தப்ப முடியாது - ஆதித்யநாத்; கோரக்பூரில் ரூ. 82 கோடியில் ஆராய்ச்சி மையம் - மத்திய அரசு


குற்றவாளிகள் தப்ப முடியாது - ஆதித்யநாத்; கோரக்பூரில் ரூ. 82 கோடியில் ஆராய்ச்சி மையம் - மத்திய அரசு
x
தினத்தந்தி 13 Aug 2017 11:24 AM GMT (Updated: 13 Aug 2017 11:24 AM GMT)

குழந்தைகளுக்கான நோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய கோரக்பூரில் ரூ. 82 கோடி செலவில் பிராந்திய ஆய்வு மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.



புதுடெல்லி,


உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையையும் நடைபெற்று வருகிறது. மருத்துவமனைக்கு திரவ ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த தனியார் நிறுவனத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.69 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பதால் கடந்த 4–ந் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை அந்த நிறுவனம் நிறுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உ.பி. அரசு பல்வேறு நிலைகளில் விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜே.பி.நட்டா குழந்தைகள் உயிரிழந்த மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவமனையில் நிலை குறித்து யோகி ஆதித்யநாத் ஆய்வு மேற்கொண்டார்கள். மருத்துவமனையில் மருத்துவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் முதல்-மந்திரியாக பதவியேற்ற பின்னர் இது என்னுடைய 4-வது பயணமாகும்.... 1996-97களில் இருந்தே இப்பகுதியில் என்சிபாலிட்டிஸ்க்கு எதிராக (மூளையில் ஏற்படும் வீக்கம்) போராடி வருகின்றேன். இவ்விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வர விரிவான விசாரணையானது அவசியமானது.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தெருவில் இருந்து பாராளுமன்றம் வரையில் போராடி உள்ளேன். மாவட்ட மருத்துவமனைகளுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றேன். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சென்று வருகின்றேன். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் அறிக்கை கோரப்படும். குழந்தைகள் உயிரிழப்பிற்கு என்சிபாலிட்டிஸ் தான் காரணம். இந்த நோயை எதிர்க்கொள்ள அரசு அதிகமான நடவடிக்கையை எடுத்து உள்ளது. 

விசாரணை அறிக்கை வந்ததும் இவ்விவகாரம் தொடர்பாக முழுமையாக ஆலோசனை மேற்கொள்வேன்.  கோரக்பூரில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளேன். பரவும் நோய் தொடர்பாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இதற்கு ஜேபி நட்டா உறுதி அளித்து உள்ளார். ஏய்ம்ஸ் மருத்துவமனை கோரக்பூருக்கு கொண்டுவர பிரதமர் மோடி அனுமதி வழங்கி உள்ளார். கோரக்பூருக்கு சிறப்பு குழு அனுப்பட்டு உள்ளது என்றார். குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்து உள்ளார். 

மத்திய மந்திரி ஜே.பி. நட்டா பேசுகையில், மத்திய அரசு முடிந்தவரையில் மாநில அரசுக்கு உதவி செய்து வருகிறது. உயிரிழப்பு காரணமாக பிரதமர் மோடி கவலை கொண்டு உள்ளார், தொடர்ந்து நிலவரத்தை கேட்டு வருகிறார். கோரக்பூருக்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கையை எடுக்கிறது. சிறப்பான மருத்துவ சேவைக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய மூன்று நபர்கள் கொண்ட குழுவானது இங்கு வந்து உள்ளது. என்சிபாலிட்டிஸ் குறித்து யோகி ஆதித்யநாத் பாராளுமன்றத்திலும் பேசிஉள்ளார். அவருடைய அறிவுரையின் பெயரில் குழந்தைகளுக்கான நோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய கோரக்பூரில் ரூ. 82 கோடி செலவில் பிராந்திய ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றார். 

பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் நோயாளிகள் வருவதாகவும், அவர்களில் 500 பேர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர் எனவும் கூறிஉள்ளார் யோகி ஆதித்யநாத்.

Next Story