ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு புதிய கொள்கை
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.ஓ.எஸ். (வனத்துறை) அதிகாரிகள் தற்போது பணியாற்றுவதற்கு மாநிலங்களை தேர்வு செய்கிற முறை உள்ளது.
புதுடெல்லி,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.ஓ.எஸ். (வனத்துறை) அதிகாரிகள் தற்போது பணியாற்றுவதற்கு மாநிலங்களை தேர்வு செய்கிற முறை உள்ளது. இந்த முறை மாற்றப்படுகிறது. இனி அவர்கள் மண்டலங்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற புதிய கொள்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
உயர் அதிகார மட்டத்தில் தேசிய ஒருங்கிணைப்பை உறுதி செய்தல் என்ற அடிப்படையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
புதிய கொள்கையின்படி 5 மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன.
முதல் மண்டலத்தில் யூனியன் பிரதேசங்களுடன் அருணாசல பிரதேசம், கோவா, மிசோரம், காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா மாநிலங்கள் இடம்பெறும்.
2–வது மண்டலத்தில் உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களும், 3–வது மண்டலத்தில் குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களும் இடம் பெறும்.
4–வது மண்டலத்தில் மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து இடம் பிடிக்கின்றன.
5–வது மண்டலத்தில் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா இடம் பெறுகின்றன.
புதிய கொள்கையின்படி, ஒருவர் தனது சொந்த மாநிலத்துக்கு பதிலாக பிற மாநிலங்களிலேயே வேலை செய்ய வேண்டியது வரும்.
உதாரணத்துக்கு பீகாரை சேர்ந்த அதிகாரிகள் தாங்கள் முன்னுரிமை அளிக்காத தெற்கு மற்றும் வட–கிழக்கு மண்டலத்தில் வேலை செய்ய வேண்டியது வரும் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த ஆண்டு முதல் புதிய கொள்கை அமலுக்கு வரலாம் என தகவல்கள் கூறுகின்றன.