ஆதார் வழக்கில் தீர்ப்பு: மத்திய மந்திரிகள் அவசர ஆலோசனை
ஆதார் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, ‘தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை’ என நேற்று தீர்ப்பளித்தது.
புதுடெல்லி,
ஆதார் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, ‘தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை’ என நேற்று அதிரடியாக தீர்ப்பளித்தது. பல்வேறு மானியங்கள், நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் சாத்தியமான வழிமுறைகள் குறித்து நேற்று மத்திய மந்திரிகள் அவசரமாக கூடி ஆலோசித்தனர். அதன்படி சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், பிரதமரின் முதன்மை செயலாளர் நிரிபேந்திர மிஸ்ரா ஆகியோர் நிதி மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்து விவாதித்தனர்.
முன்னதாக ஆதார் அட்டை வழங்கி வரும் நிறுவன (உடாய்) தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டேவும் மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் அருண்ஜெட்லி ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புகள் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். எனினும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.