2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தீர்ப்பு


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தீர்ப்பு
x
தினத்தந்தி 25 Aug 2017 10:15 PM GMT (Updated: 25 Aug 2017 8:49 PM GMT)

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி நேற்று தெரிவித்தார்.

புதுடெல்லி,

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி ஓ.பி.சைனி இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கில் சி.பி.ஐ. சார்பில் கடந்த 2011–ம் ஆண்டும், அமலாக்க பிரிவின் சார்பில் 2014–ம் ஆண்டும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

122 நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு 30 ஆயிரத்து 984 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ளது.

இந்த வழக்கில் 154 சாட்சிகளை சி.பி.ஐ. விசாரணை செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

2015–ம் ஆண்டு செப்டம்பர் 1–ந் தேதி இறுதி வாதம் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 26–ந் தேதி இறுதி வாதம் முடிவடைந்தது. கடந்த ஜூலை 5–ந் தேதியன்று நீதிபதி ஓ.பி.சைனி, வழக்கு தொடர்பான சந்தேகங்களையும், திருத்தங்களையும் ஆகஸ்டு 25–ந் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம் என்றும் செப்டம்பர் 5–ந் தேதிக்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

அதன்படி, நேற்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்ளிட்டோர் தனிக்கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

கோர்ட்டு தொடங்கியதும் நீதிபதி ஓ.பி.சைனி, தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை என்றும், அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பில் ஏதேனும் விளக்கங்கள் இருந்தால் எழுத்து வடிவில் வருகிற செப்டம்பர் 20–ந் தேதி தாக்கல் செய்யலாம் என்றும், அதற்கு பிறகு ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் கழித்து வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.


Next Story