லாரி–ஜீப் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி
மும்பையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது சொந்த ஊரான குஜராத் மாநிலம் பவன்நகர் மாவட்டத்துக்கு ஜீப் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
ஆமதாபாத்,
மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது சொந்த ஊரான குஜராத் மாநிலம் பவன்நகர் மாவட்டத்துக்கு ஜீப் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
நேற்றுகாலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள தன்துகா–பர்வாவலா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஜீப் டிரைவர் திடீரென கண் அயர்ந்தார்.
இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையில் தறிக்கெட்டு ஓடியது. அப்போது எதிர்திசையில் வந்த லாரியின் மீது ஜீப் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். இவர்களில் 5 பெண்களும் அடங்குவர்.
ஒரு சிறுவன் படுகாயங்களுடன் உயிர் தப்பினான். அவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். இருப்பினும் அவனது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.