அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை சசிகலா கூட பார்க்கவில்லை
‘‘சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை சசிகலா கூட பார்க்கவில்லை’’ என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
குடகு,
டி.டி.வி.தினகரன் நேற்று காலை சொகுசு விடுதியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது கவர்னர் சென்று அவரை பார்த்தார். ஆஸ்பத்திரியில் இருந்த ஜெயலலிதாவை அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், வெளிநாட்டு டாக்டர்கள் பார்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.
செப்டம்பர் மாதம் 22–ந் தேதி ஜெயலலிதா உடல்நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 1–ந் தேதி முதல் ஜெயலலிதாவை சசிகலா கூட பார்க்கவில்லை. ஜெயலலிதாவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக யாரையும் டாக்டர்கள் பக்கத்தில் அனுமதிக்கவில்லை.
எப்போதாவது அனுமதி பெற்று 2 நிமிடம் மட்டும் பார்த்துவிட்டு வருவார். அம்மாவின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு கூட உத்தரவிடட்டும். எங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. சசிகலா அனுமதித்தால் அதை வெளியிடுவோம்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்