ரயில்வே உணவுப் பொருட்களில் விலையை கட்டாயம் பொறிக்க வேண்டும் - அமைச்சர் பியூஷ் கோயல்


ரயில்வே உணவுப் பொருட்களில் விலையை கட்டாயம் பொறிக்க வேண்டும் - அமைச்சர் பியூஷ் கோயல்
x
தினத்தந்தி 25 Sep 2017 5:50 PM GMT (Updated: 25 Sep 2017 5:50 PM GMT)

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் ஆணையை அடுத்து ரயில்வேயில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் விலையைப் பொறிப்பது கட்டாயம் என்று அறிவித்துள்ளது ரயில்வே வாரியம்.

மும்பை

அமைச்சரின் ஆணையை ஏற்றே வாரியம் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக ரயில் நிலையங்களில் உள்ள விற்பனை அரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் இவ்வாறு குறைந்தபட்ச விலையைப் பொறிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிக்கையில் குறைந்தபட்ச விலையைத் தவிர பிறத் தகவல்களை இடம் பெறச் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. ”உணவுப் பொருட்களில் நான்கு விபரங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். சப்ளையர் மற்றும் காண்டிராக்டரின் பெயர், எடை/ கிராம்களில், பேக்கிங் செய்யப்பட்ட நாள் மற்றும் சைவமா அல்லது அசைவமா என்ற விபரம் ஆகிய நான்கும் இடம் பெற வேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் அனில் கல்காலி எழுப்பிய புகாரின் அடிப்படையில் ரயில்வே வாரியம் இந்த புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. புகாரை அறிந்த பாஜக பிரமுகர் பேராசிரியர் பால்சந்திர ஷிர்சாத் அமைச்சர் கோயலிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்தே அமைச்சர் வாரியத்திடம் இது குறித்து ஆணை பிறப்பிக்க கட்டளையிட்டுள்ளார்.

மக்களிடமிருந்து உணவு பொருள் தயாரிப்பாளர்கள், விநியோகிப்பாளர்கள் கொள்ளையடிப்பதை தடுக்க உதவிய அமைச்சருக்கு கல்காலி நன்றி தெரிவித்தார்.


Next Story