ஜெய்சால்மீரில் கிராமத்தை விட்டு வெளியேறிய இஸ்லாமியர்களுக்கு உணவு கிடையாது


ஜெய்சால்மீரில் கிராமத்தை விட்டு வெளியேறிய இஸ்லாமியர்களுக்கு உணவு கிடையாது
x
தினத்தந்தி 12 Oct 2017 9:51 AM GMT (Updated: 12 Oct 2017 9:50 AM GMT)

ஜெய்சால்மீரில் உயர் பிரிவு இந்துக்களிடம் இருந்து மிரட்டல் இருப்பதாக கிராமத்தை விட்டு வெளியேறிய இஸ்லாமியர்களுக்கு உணவு இல்லாத நிலை காணப்படுகிறது.



ஜெய்சால்மீர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீரில் உள்ள தண்டால் கிராமத்தில் கடந்த 27-ம் தேதி நாட்டுப்புற பாடகர் அகமது கான் (வயது 52) சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். அகமது கான் தசரா விழா நடைபெற்ற போது சரியாக பாடவில்லை என ராஜ்புத் மற்றும் உயர் ஜாதியை சேர்ந்த இந்துக்கள் அடித்து கொன்றுவிட்டனர் என அகமது கான் உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் ராஜ்புத் மற்றும் உயர் வகுப்பை சார்ந்தவர்கள் தரப்பில் அகமது கான் மாரடைப்பு காரணமாகவே இறந்துவிட்டார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசுக்கு செல்லக்கூடாது என அகமது கான் உறவினர்களை உயர் பிரிவினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

அகமது கானை உள்ளூர் சாமியார் ரமேஷ் சுதார் மற்றும் அவருடைய சகோதரர்கள் கொன்றுவிட்டனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

அகமது கானின் உறவினர்கள் இதுதொடர்பாக போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது. இதனையடுத்து இஸ்லாமியர்கள் பாதுகாப்பு காரணமாக பாலாத் கிராமத்திற்கு சென்றுவிட்டனர். கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மாவட்ட நிர்வாகத்தை நாடி தங்களுக்கு பாதுகாப்பான இடம் வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். மாவட்ட நிர்வாகமும் அவர்களுக்கு தேவையான உதவியை செய்வதாக கூறிஉள்ளது. ஆனால் அவர்களுக்கு உணவு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இஸ்லாமியர்கள் தாங்கள் தங்கிஉள்ள முகாமில் உணவு சமைத்து சாப்பிட்டு உள்ளனர். முகாம்களில் தேவையான வசதிகள் கிடையாது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. 

முகாமில் 20 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் உள்ளனர், அவர்கள் தங்களுடைய கிராமத்திற்கு செல்ல விரும்பவில்லை. 

ஜெய்சால்மீர் நகராட்சி கமிஷனர் ஜபார் சிங்கிடம் இதுதொடர்பாக பேசிய போது, “நாங்கள் இடம்பெயர்ந்த இஸ்லாமியர்களுக்கு திங்கள் கிழமை மட்டும் உணவு வழங்கினோம், எங்களிடம் போதிய அளவு பணம் இல்லாத காரணமாக தினமும் வழங்க முடியவில்லை,” என கூறிஉள்ளார். 

இதற்கிடையே பாடகர் அகமது கான் கொல்லப்பட்டது தொடர்பாக சாமியார் ரமேஷ் சுதாரை போலீஸ் கைது செய்து உள்ளது. ஆனால் அவருடைய சகோதரர்கள் தலைமறைவு ஆகிவிட்டார்கள். இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இஸ்லாமியர்கள் கிராமத்திற்கு பத்திரமாக திரும்பவும், அவர்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்யவும் இருதரப்பு இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது எனவும் மாவட்ட நிர்வாகம் கூறிஉள்ளது.

Next Story