தாயை கொலை செய்து எரித்த மகன் பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்ட கொடுமை


தாயை கொலை செய்து எரித்த மகன் பின்னர்  நண்பர்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்ட கொடுமை
x
தினத்தந்தி 29 Dec 2017 12:12 PM GMT (Updated: 29 Dec 2017 12:12 PM GMT)

தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை வீட்டு கொல்லைப்புறத்தில் வைத்து எரித்த மகன் சாவகாசமாக வீட்டில் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு நண்பர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு உள்ளார். #keralanews

திருவனந்தபுரம்

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள அம்பலமுக்கு பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அசோக் என்பவருக்கு தீபா (50) என்ற மனைவியும் அக்‌ஷய் (23) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்.அசோக் மஸ்கட்டில் வேலை செய்து வரும் நிலையில், அவர் மகள் திருமணமாகி ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார் .வீட்டில் தீபாவும் அக்‌ஷயும் மட்டும் வசித்து வருகிறார்கள். இன்ஞினியரிங் படிப்பை இந்தாண்டு முடித்த அக்‌ஷய் அரியர்ஸ் வைத்துள்ள மீதமுள்ள பேப்பர்களை முடிக்க காத்திருந்தார்.

கடந்த 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று தீபாவிடம் அக்‌ஷய் பணம் கேட்ட நிலையில் அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அத்திரமடைந்த அக்‌ஷய் தனது தாயை படுக்கை விரிப்பால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். பின்னர் வீட்டு கொல்லைப்புறத்தில் சடலத்தை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளான்.

அந்த பகுதியில் உள்ள வீடுகளில் எல்லோரும் கொல்லைபுறத்தில் குப்பையை போட்டு எரிப்பார்கள் என்பதால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வரவில்லை.ஆனால் அடுத்த நாள் எப்படியோ எரிந்த நிலையில் சடலம் அக்‌ஷய் வீட்டில் கிடப்பதாக அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. இந்நிலையில் தனது தாயை காணவில்லை என அக்‌ஷய் போலிசாரிடம் சென்று புகார் கொடுத்துள்ளான். ஆனால் போலீஸ் விசாரணைக்கு அவன் சரியாக ஒத்துழைக்காத நிலையில் ஒரு கட்டத்தில் தீபாவை கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளான்.

தீபாவை கொலை செய்து எரித்த பிறகு வீட்டில் ஆம்லெட் சாப்பிட்டதாகவும், பின்னர் வெளியில் நண்பர்களுடன் சென்று ஐஸ்கிரீம் சாப்பிட்டதாகவும் அக்‌ஷய் வாக்குமூலம் அளித்துள்ளான். இதையடுத்து அக்‌ஷயை கைது செய்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தீபா இறந்த தகவல் அவரின் கணவன் மற்றும் மகளுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு அவர்கள் வந்துள்ளனர்.

இதே போல்தான்   சென்னை அருகே குன்றத்தூரை சேர்ந்தவர் தஷ்வந்த் என்ற வாலிபர்   மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடந்த பிப்ரவரி மாதம் கற்பழித்து கொலை செய்து உடலை எரித்தார். பின்னர் இந்த வழக்கில்  ஜாமினீல் வந்த  தஷ்வந்த் தாயார் பணம்  தராததால் அவரையும் கொலை செய்தார். தற்போது தஷ்வந்த் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். 

Next Story