ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த  இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 13 Feb 2018 10:52 AM GMT (Updated: 13 Feb 2018 10:52 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். #Tamilnews

ஜம்மு,

காஷ்மீரின் ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் கடந்த 10-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். பின்னர் ராணுவத்துடன் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீநர் அருகே உள்ள கரன் நகர் பகுதியில் அமைந்துள்ள, துணை ராணுவப்பிரிவான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.)  முகாமுக்குள் நேற்று அதிகாலையில் பயங்கரவாதிகள் நுழைய முயன்றனர். பயங்கர ஆயுதங்களுடன் முகாம் அருகே வந்த அந்த 2 பயங்கரவாதிகளை  காவலாளி கண்டுபிடித்தார்.உடனே அவர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் பயங்கரவாதிகள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை சி.ஆர்.பி.எப். வீரர்கள் துரத்திச்சென்றனர். எனவே அந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த ஒரு பாழடைந்த வீட்டுக்குள் சென்று பதுங்கினர்.

இதைத்தொடர்ந்து ராணுவ கமாண்டோ படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் இணைந்து அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டுக்குள் இருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளை நோக்கி தாக்குதலை தொடுத்தனர்.

இதனால் இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில் முஜாகித் கான் என்ற சி.ஆர்.பி.எப். வீரர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீட்டுக்குள் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், இன்று மீண்டும் தாக்குதலை துவங்கிய பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். 

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள்  இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பயங்கரவாதிகள் இருவரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள்  என்று  காஷ்மீர் ஐஜிபி எஸ்.பி பானி தெரிவித்தார். துப்பாக்கிச்சண்டையில் காயம் அடைந்த ஒரு சி.ஆர்.பி.எப் வீரர் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.  


Next Story