பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை


பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
x
தினத்தந்தி 16 Feb 2018 2:25 PM GMT (Updated: 16 Feb 2018 2:25 PM GMT)

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடியின் இருப்பிடம் தெரியாது என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. #PunjabNationalBank #PNBfraud


புதுடெல்லி,

 பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நடந்த மோசடியில் தொடர்புடைய மும்பை வைர வியாபாரி நிரவ் மோடியின் வீடு மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

அப்போது ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் சிக்கின. இன்றும் இதுதொடர்பான சோதனையில் விசாரணை முகமைகள் ஈடுபட்டது. இன்றைய சோதனையின் போது மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11,400 கோடி மோசடி தொடர்பாக நிரவ் மோடி மற்றும் அவருடைய கூட்டாளி மெகுல் சோஷிக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் விடுத்து உள்ளது.

அமலாக்கப்பிரிவு கோரிக்கையை ஏற்று வெளியுறவுத்துறையில் உள்ள பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகள் நிரவ் மோடி மற்றும் அவருடைய வர்த்தக கூட்டாளி மெகுல் சோக்ஷியின் பாஸ்போர்ட் செல்லுபடிதன்மையை உடனடியாக ரத்து செய்தனர், 4 வார காலங்களுக்கு இது அமலில் இருக்கும்.  பாஸ்போர்ட்டை ஏன் பறிமுதல் செய்ய கூடாது? ரத்து செய்யக்கூடாது? என கேள்வியை எழுப்பி வெளியுறவுத்துறை இருவருக்கும் நோட்டீஸ் விடுத்து உள்ளது. சரியான நேரத்தில் அவர்கள் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை என்றால் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். இருவரும் தங்களுடைய பதிலை ஒரு வாரங்களுக்குள் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மோசடியில் சிக்கிய நிரவ் மோடியை பிடிக்க இன்டர்போலை சிபிஐயை நாடி உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருப்பிடம் தெரியாது 

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஜனவரி 31-ம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்து, ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் விடுத்தது. ஆனால் நிரவ் மோடி, அவருடைய குடும்பத்தார் மற்றும் கூட்டாளிகள் நாட்டை விட்டு ஜனவரி மாத தொடக்கத்திலே சென்றுவிட்டனர் என தெரியவந்து உள்ளது. இதற்கிடையே நிரவ் மோடி நியூயார்க்கில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் வங்கி மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடியின் இருப்பிடம் தெரியாது என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.


Next Story