மனைவி - உறவினர்கள் சூழ 30 வயது பெண்ணை மணந்த 83 வயது தாத்தா


மனைவி - உறவினர்கள் சூழ 30 வயது பெண்ணை மணந்த 83 வயது தாத்தா
x
தினத்தந்தி 20 Feb 2018 7:27 AM GMT (Updated: 20 Feb 2018 7:27 AM GMT)

83 வயதான தாத்தா 30 வயது இளம்பெண்ணை மனைவி மற்றும் உறவினர்கள் படை சூழ மணந்து உள்ளார். #TamilNews

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுக்ராம் (வயது 83). 1958-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் 83 வயதான சுக்ராமுக்கு 2-வது திருமணம் நடந்தது. 30 வயதான ரமேசி தேவி என்பவரை அவர் மணந்து கொண்டார். அதாவது 60 ஆண்டுகளுக்கு பிறகு சுக்ராம் தனது முதிர்ச்சியான காலத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் ஆடல், பாடலுடன் ஊர்வலமாக வெகு விமர்சையாக நடந்தது. முதல் மனைவியின் முன்னிலையில் தான் திருமணம் நடந்தது. அனைத்து சம்பிரதாயங்களும் திருமண விழாவில் பின்பற்றப்பட்டன. 12 கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர்கள் இதில் பங்கேற்றனர்.

ஆண் வாரிசுக்காகதான்  சுக்ராம் இந்த வயதில் திருமணம் செய்து கொண்டார். அவரது ஒரே மகன் 30 வயதில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனான். 

தொழிலாளியாக இருந்த அவர் உழைத்து முன்னேறி காண்டிராக்டராக மாறினார். இதனால் ஏராளமான சொத்துக்கள் அவரிடம் இருக்கிறது.  இந்த சொத்துக்களை அனுபவிக்க ஆண் வாரிசு இல்லாததால் அவர் 2-வது திருமணம் செய்தார்.  இது குறித்து சுக்ராம் கூறியதாவது:-

டெல்லி, அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் எனக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. எனது ஒரே மகன் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். தற்போது இந்த சொத்தை அனுபவிக்க மகன் இல்லை. இதற்காகவே நான் மீண்டும் திருமணம் செய்து கொண்டேன்.

2-வது திருமணம் செய்ததில் எனது முதல்-மனைவிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவரது ஒப்புதலுடன் தான் திருமணம் நடந்தது. கடவுளின் கருணையால் இது நடந்தது. எங்களது ஒரே விருப்பம் மகன்தான். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story