தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி 8.55 சதவீதமாக குறைப்பு


தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி 8.55 சதவீதமாக குறைப்பு
x
தினத்தந்தி 21 Feb 2018 11:45 PM GMT (Updated: 21 Feb 2018 9:26 PM GMT)

2017–2018–ம் நிதி ஆண்டுக்கான, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) வட்டி 8.55 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர்கள் வாரியத்தின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டில், 8.65 சதவீதமாக இருந்த வட்டி, தற்போது 0.10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘இந்த முடிவுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அனைத்து தொழிற்சங்கங்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், எதிர்காலத்தை கணிக்க முடியாது என்பதால், இந்த வட்டி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல், ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர்கள் இருந்தால், பி.எப். பிடிக்க வேண்டும் என்ற விதிமுறையை 10 தொழிலாளர்கள் இருந்தாலே பி.எப். பிடிக்க வேண்டும் என்று மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சட்ட திருத்தம் கொண்டுவரப்படும். இதன்மூலம், பி.எப். சந்தாதாரர்கள் எண்ணிக்கை 9 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.


Next Story