நடிகர் கமல்ஹாசன் சந்திரபாபு நாயுடுவை அரசியல் ஹீரோ எனக்கூறியது வருத்தம் அளிக்கிறது


நடிகர் கமல்ஹாசன் சந்திரபாபு நாயுடுவை அரசியல் ஹீரோ எனக்கூறியது வருத்தம் அளிக்கிறது
x
தினத்தந்தி 22 Feb 2018 11:00 PM GMT (Updated: 22 Feb 2018 8:37 PM GMT)

புதிய கட்சி தொடங்கி உள்ள நடிகர் கமல்ஹாசன், ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை அரசியல் ஹீரோ என கூறியது வருத்தம் அளிக்கிறது என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

நகரி,

நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிரணி தலைவியுமான நடிகை ரோஜா நகரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு தமிழகத்தில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவில் ஆந்திராவிலும் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்து ஊழலை ஒழித்து ஒரு புதிய ஆட்சியை தருவார்கள் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தநிலையில், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியை அறிமுகப்படுத்தி கமல்ஹாசன் பேசுகையில், ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, நான் விரும்பும் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்றும், அவர் என் ஹீரோ என்றும் பேசியதாக பத்திரிகைகளில் படித்து மிகவும் வருந்தினேன்.

ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்துள்ள அவர் மூச்சுத்திணறும் அளவுக்கு ஆந்திராவில் ஊழல் ஆட்சியில் மூழ்கியுள்ள சந்திரபாபுநாயுடுவை புகழ்ந்து இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 23 எம்.எல்.ஏ.க்களை கோடிக்கணக்கான பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய சந்திரபாபு நாயுடு, அவர்களை ராஜினாமா செய்யாமலேயே தனது கட்சியில் சேர்த்துக்கொண்டு அதில் 4 பேருக்கு மந்திரி பதவி வழங்கி உள்ளார்.

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்ட சந்திரபாபு நாயுடுவை, கமல்ஹாசன் போன்றவர்கள் புகழ்ந்து இருப்பதை பார்த்து ஆந்திராவில் உள்ள அவரது ரசிகர்கள் வேதனைப்படுகின்றனர்.

பா.ஜனதா போன்ற மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன். இனி அதுபோன்ற தவறு செய்யமாட்டேன் என இப்தார் விருந்து ஒன்றில் கூறிய சந்திரபாபு நாயுடு, 2014–ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதை தெரிந்துகொண்டு அவருடன் கைகோர்த்து தேர்தலில் போட்டியிட்டதுடன் ஆட்சியிலும் பங்கேற்று வருகிறார்.

கடந்த தேர்தலில் 600 வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடு இதுவரை ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றாதவர். ஊழலை ஒழிக்க கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்துள்ள கமல்ஹாசன் சந்திரபாபு நாயுடுவை பற்றி இன்னும் நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு நடிகை ரோஜா தெரிவித்தார்.


Next Story