அடுத்த ஆண்டு முதல் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடச்சுமை குறையும்


அடுத்த ஆண்டு முதல் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடச்சுமை குறையும்
x
தினத்தந்தி 24 Feb 2018 11:30 PM GMT (Updated: 24 Feb 2018 8:09 PM GMT)

மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நாடாளுமன்ற மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுடெல்லி,

மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் தற்போது பாடச்சுமை மிகவும் கடுமையாக உள்ளது. பி.ஏ. மற்றும் பி.காம் பட்டப் படிப்புகளை விட மிக அதிகமாக காணப்படுகிறது. மாணவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது திறனை வெளிப்படுத்துவதற்கு நேரம் தேவை என்பதால் இந்த பாடச்சுமை குறைக்கப்படவேண்டியது அவசியமாகும்.

மேலும் மாணவர்களின் அறிவாற்றல் திறனை மேம்படுத்தவேண்டும் என்றால் நிச்சயம் அவர்களுக்கு கல்வியில் முழுமையான சுதந்திரம் தேவை. எனவே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தின் பாடச்சுமையை பாதியாக குறைக்கும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறேன். 2019–ம் கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும்.

மத்திய பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவும், அதை வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு மாணவர் மார்ச் மாத தேர்வில் தோல்வி கண்டால் அவருக்கு மே மாதம் தேர்வு எழுத இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story