பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நடந்த முறைகேடு பற்றி நாட்டின் காவலாளியான மோடி மவுனம் சாதிப்பது ஏன்?


பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நடந்த முறைகேடு பற்றி நாட்டின் காவலாளியான மோடி மவுனம் சாதிப்பது ஏன்?
x
தினத்தந்தி 25 Feb 2018 11:45 PM GMT (Updated: 25 Feb 2018 8:22 PM GMT)

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நடந்த முறைகேடு பற்றி பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி விடுத்தார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் 2–வது கட்ட பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் கர்நாடகத்திற்கு வந்தார். 2–வது நாளான நேற்று, பாகல்கோட்டை மாவட்டம் சிக்கபடசலு கிராமத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டபோது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வங்கி வாசலில் நீண்ட வரிசையில் நின்று டெபாசிட் செய்தனர். அந்த வரிசையில் ஒரு பணக்காரரோ, கோட்–சூட் அணிந்தவரோ நிற்கவில்லை. மோடியின் உதவியால், எல்லா திருடர்களும் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கி விட்டனர்.

பணக்காரர்கள் வாங்கிய வங்கி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். அதாவது பணக்காரர்களின் கடனை ரூ.1.40 லட்சம் கோடிவரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

ஆனால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மோடி முன்வரவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக மோடி கூறினார். ஆனால் சொன்னபடி வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை.

மேக்இன் இந்தியா திட்டத்தையும் மீறி, வாட்ச் முதல் ஷூ வரை எல்லாமே சீனாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கிறது.

குஜராத்தில் ஒரே தொழில் அதிபருக்கு 45 ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா பணக்காரர்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுகிறது. இதுதான் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.

பிரதமர் மோடி கர்நாடகம் வந்தபோது, ஊழல் ஒழிப்பு பற்றி பேசினார். ஊழல் வழக்குகளில் சிறைக்கு சென்று வந்த முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா மற்றும் முன்னாள் மந்திரிகளை அருகில் உட்கார வைத்துக்கொண்டு இவ்வாறு பேசுகிறார். இதை கர்நாடக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

நாட்டை காக்கும் காவலாளியாக இருப்பதாக மோடி கூறுகிறார். ஆனால், நிரவ் மோடி வங்கிகளில் ரூ.22 ஆயிரம் கோடி கொள்ளையடித்து விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அதுபற்றி காவலாளியான மோடி ஒருவார்த்தை கூட கூறாமல் மவுனம் சாதிக்கிறார்.

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, வெறும் 50 ஆயிரம் ரூபாயை 3 மாதங்களில் ரூ.80 கோடியாக பெருக்கி உள்ளார். அதுபற்றியும் இந்த காவலாளி (மோடி) விசாரிக்கவும் இல்லை, ஒரு வார்த்தைகூட கூறவும் இல்லை.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Next Story