புதிய உச்சத்தை நோக்கி ‘நாட்டையும், சமூகத்தையும் பெண்கள் முன்னெடுத்து செல்கின்றனர்’


புதிய உச்சத்தை நோக்கி ‘நாட்டையும், சமூகத்தையும் பெண்கள் முன்னெடுத்து செல்கின்றனர்’
x
தினத்தந்தி 25 Feb 2018 11:30 PM GMT (Updated: 25 Feb 2018 8:28 PM GMT)

நாட்டையும், சமூகத்தையும் புதிய உச்சத்தை நோக்கி பெண்கள் முன்னெடுத்து செல்வதாக ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் பொங்க கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) என்ற பெயரில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதன்படி 41–வது ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.

இதில் பல்வேறு தகவல்களை வானொலி மூலம் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, அடுத்த மாதம் (மார்ச்) 8–ந்தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுவதால் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக பேசினார். அவர் தனது உரையில் கூறியதாவது:–

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8–ந்தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்திய பெண்களுக்கு இந்தியாவில் விருது அளித்து கவுரவிக்கப்படுகிறது. நமது நாடு இன்று பெண்களின் வளர்ச்சி பாதையில் இருந்து, பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான பாதையை நோக்கி நடைபோடுகிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை. அது சமூகம் சார்ந்ததோ அல்லது பொருளாதாரம் சார்ந்ததாகவோ இருக்கலாம். அனைத்து துறைகளிலும் அவர்களின் பங்கேற்பை உறுதி செய்வது நமது அடிப்படை கடமை ஆகும்.

இன்று, இந்திய பெண்களின் சக்தி தங்கள் மனோபலம், தன்னம்பிக்கை மற்றும் சுயசார்பு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. அவர்கள் தங்களை முன்னேற்றுவது மட்டுமின்றி இந்த சமூகத்தையும், ஒட்டுமொத்த நாட்டையும் புதிய உச்சத்தை நோக்கி முன்னெடுத்து செல்கின்றனர். அனைத்துக்கும் மேலாக, பெண்களின் வலிமை, முன்னேற்றம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் அவர்களை சம பங்காளர்களாக கொண்ட தேசமே நமது கனவாகிய புதிய இந்தியா ஆகும்.

தேசிய அறிவியல் தினம் 28–ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நமது விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தொழில்நுட்பமும், செயற்கை நுண்ணறிவும் ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

நமது கலாசாரத்தில் மதிப்பை காப்பது குறித்து நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் பாதுகாப்பின் மதிப்பையும் நாம் உணர வேண்டும். இது நமது வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். தேசிய பேரிடரைத்தவிர பெரும்பாலான விபத்துகள் நமது அலட்சியத்தால் ஏற்படுகின்றன. நாம் விழிப்புடனும், விதிகளை பின்பற்றுவதாலும் இத்தகைய சூழல்களை தவிர்க்க முடியும். நமது சமூகத்தை ஆபத்து உணர்வு மிகுந்த சமூகமாக மாற்ற வேண்டும்.

தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்படும் கோபர்தன் யோஜனா திட்டத்தின் கீழ் சாணம், பண்ணைக்கழிவுகள் மற்றும் சமையலறை கழிவுகள் இயற்கை எரிவாயு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும். இத்தகைய கழிவு சேகரிப்பு மற்றும் இயக்கத்தின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story