நடிகை ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள்


நடிகை ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள்
x
தினத்தந்தி 27 Feb 2018 12:00 AM GMT (Updated: 26 Feb 2018 10:11 PM GMT)

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

துபாய், 

பிரபல நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக கடந்த 22-ந்தேதி துபாய் சென்றிருந்தார். திருமணம் முடிந்து 24-ந்தேதி அங்குள்ள ‘ஜூமெய்ரா எமிரேட்ஸ் டவர்ஸ்’ என்ற நட்சத்திர ஓட்டலில் கணவருடன் தங்கினார்.

இந்தநிலையில் அன்றிரவு அவர் குளியல் அறைக்கு சென்றபோது நெஞ்சு வலி ஏற்பட்டு ஸ்ரீதேவி மயங்கி சரிந்ததாகவும், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, டாக்டர்கள் பரிசோதித்ததாகவும், மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல் பிரேத பரிசோதனை, துபாய் போலீஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள பிரேத பரிசோதனைக் கூடத்தில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது. ஆனால் தடய அறிவியல் அறிக்கை வருவதற்கு தாமதம் ஆனதால் அன்றைய தினம் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இந்தநிலையில் ஸ்ரீதேவி ஓட்டலில் தங்கி இருந்தபோது நடந்தது என்ன என்பது பற்றி புதிய தகவல்கள் நேற்று வெளியாகின.

4 நாட்களுக்கு முன் துபாயில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவில் கலந்து கொண்டு போனிகபூர், இளைய மகள் குஷி கபூர் மற்றும் பெரும்பாலான உறவினர்கள் மும்பை திரும்பி விட்டனர். மூத்த மகள் ஜான்வி படப்பிடிப்பு காரணமாக மும்பையிலேயே தங்கி விட்டார்.

ஸ்ரீதேவியுடன் அவருடைய தங்கை ஸ்ரீலதா தங்கி இருந்தார். சில நாட்களை துபாயில் கழிக்கலாம் என்ற எண்ணத்தில் அவர் அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மனைவியை ஆச்சரியப்படுத்தும் விதமாக போனி கபூர் 24-ந்தேதி மீண்டும் துபாய்க்கு வந்தார். மாலை 5.30 மணி அளவில் அதே நட்சத்திர ஓட்டலில் மனைவி ஸ்ரீதேவியுடன் தங்கினார். பின்னர் இரவு உணவுக்கு அவர் ஏற்பாடு செய்தார்.

அப்போது இருவரும் 15 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு இரவு உணவு நிகழ்ச்சிக்கு செல்ல தயார் ஆனார்கள். இதற்காக ஸ்ரீதேவி குளியல் அறைக்கு சென்றார். 15 நிமிடங்கள் ஆகியும் அவர் வெளியே வராததால் கணவர் போனி கபூர் குரல் கொடுத்துள்ளார்.

அதற்கு எந்தவித பதிலும் வராததால் அதிர்ச்சியடைந்த அவர் கதவை முட்டித் தள்ளி திறந்து பார்த்தார். அப்போது ஸ்ரீதேவி, குளிக்கும் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்த நிலையில் எவ்வித அசைவும் இன்றி உள்ளே மயங்கி கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போனிகபூர், அவரை தூக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. உடனடியாக தனது நண்பர் ஒருவரை உதவிக்கு அழைத்திருக்கிறார். பின்னர் குளியல் அறை தொட்டியில் இருந்து ஸ்ரீதேவியை அப்புறப்படுத்தினர். இதை தொடர்ந்து இரவு 9 மணிக்கு போலீசாருக்கு போனிகபூர் தகவல் அளித்துள்ளார்.

இதனால் முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மருத்துவ குழுவுடன் போலீசார் அந்த ஓட்டலுக்கு விரைந்தனர். அங்கு மருத்துவ குழுவினர், ஸ்ரீதேவியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதனை மருத்துவ குழுவினர் உறுதி செய்து அறிவித்துள்ளனர்.

இரவு 11 மணி அளவில் ஸ்ரீதேவி இறந்தது பற்றி அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடப்பட்டது. இதை துபாயில் உள்ள இந்திய தூதரகமும் உறுதி செய்தது.

இதன்பிறகே ஸ்ரீதேவியின் உடல் போலீஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள பிரேத பரிசோதனை மற்றும் தடய அறிவியல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் இந்திய தூதரக அதிகாரிகளும், ஸ்ரீதேவியின் குடும்பத்தினரும் நேற்று மதியம் பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட அறைக்கு வரவழைக்கப்பட்டனர்.

அங்கு ஸ்ரீதேவி இறந்தது பற்றிய சான்றிதழ், துபாய் நகரின் தடுப்பு மருந்து இயக்குனர் சார்பில் முத்திரையிட்டு வழங்கப்பட்டது.

அதில் மரணத்துக்கு காரணம் ஸ்ரீதேவி தற்செயலாக நீரில் மூழ்கியது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் அவருடைய ரத்தத்தில் மதுபானம் கலந்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து அவருடைய உடல் நறுமணமூட்டி பாதுகாத்து வைக்கும் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

துபாய் நகர நிர்வாக நடைமுறைப்படி ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு முன்பாக அவருடைய பாஸ்போர்ட் ரத்து, மரணச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இதற்கான பணிகளில் அங்குள்ள சமூக சேவை பணியாளர்களும், போனிகபூர் குடும்பத்தினரும் ஈடுபட்டனர்.

அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு அவை உறுதி செய்யப்பட்ட பிறகே ஸ்ரீதேவியின் உடல் போனிகபூரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே ஸ்ரீதேவி மரணம் குறித்து அவர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் நிர்வாகம் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டது. அந்த ஓட்டலின் ஊழியர் ஒருவர் கூறுகையில், “இந்திய நடிகையின் மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார். 

போனிகபூரிடம் போலீஸ் விசாரணை

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக துபாய் போலீசார் நேற்று அவருடைய கணவர் போனி கபூரிடம் தீவிர விசாரணை நடத்தி அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்தனர். ஸ்ரீதேவி குளியல் அறைக்குள் சென்றநேரத்தில் வெளியில் போனிகபூர் மட்டுமே இருந்ததாக கூறப்பட்டதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் ஸ்ரீதேவி இறப்பதற்கு முன்பாக 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை அவரிடம் யார் யாரெல்லாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் என்பதையும், குறிப்பாக அவரிடம் அடிக்கடி யார் பேசினார்கள் என்பதையும் கண்காணித்து அதன் அடிப்படையிலும் துபாய் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

விடை தெரியாத 3 கேள்விகள்

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இறந்ததாக முதலில் கூறப்பட்டது. தற்போது அவர் தற்செயலாக நீரில் மூழ்கி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.

அவருடைய மரணம் தொடர்பாக 3 மிகப் பெரிய கேள்விகள் எழுந்துள்ளன.

* போனிகபூர் குளியல் அறையை முட்டித்தள்ளிக் கொண்டு சென்றபோது மாலை 6.25 மணி என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சம்பவம் குறித்து துபாயைச் சேர்ந்த நண்பரின் அறிவுரைக்கு பிறகு இரவு 9 மணிக்குத்தான் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்து உள்ளார். ஏன் இந்த தாமதம்?...

* போனிகபூர் இதுபோன்ற சூழ்நிலையில் நட்சத்திர ஓட்டலின் அவசர மருத்துவ உதவியை ஏன் நாடவில்லை?...

* ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பால் மரணம் நிகழ்ந்தது என்பதை யார், எதற்காக கூறினார்கள்?

விடை காணமுடியாத கேள்விகளாக இவை உள்ளன. 

Next Story