சிபிஐக்கு என்னுடைய பாஸ்வேர்டை தெரிவிக்கவே மாட்டேன் - கார்த்தி சிதம்பரம்


சிபிஐக்கு என்னுடைய பாஸ்வேர்டை தெரிவிக்கவே மாட்டேன் - கார்த்தி சிதம்பரம்
x
தினத்தந்தி 9 March 2018 11:06 AM GMT (Updated: 9 March 2018 11:06 AM GMT)

சிபிஐக்கு என்னுடைய செல்போனின் பாஸ்வேர்டை தெரிவிக்கவே மாட்டேன் என கார்த்தி சிதம்பரம் கூறிஉள்ளார். #KartiChidambaram


புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடு பெற அனுமதி பெற்றுக்கொடுத்து ஆதாயம் அடைந்ததாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த வாரம் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருகிறார் என்பதே சிபிஐயின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. 

கார்த்தி சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி, டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில்  சி.பி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களின் பாஸ்வேர்டுகளை தெரிவிக்க கார்த்தி சிதம்பரம் மறுக்கிறார், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க முற்றிலும் மறுக்கிறார் என ஏற்கனவே சிபிஐ தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்த கார்த்தி சிதம்பரம் பேசுகையில், சிபிஐக்கு என்னுடைய செல்போன் பாஸ்வேர்டை தெரிவிக்கவே மாட்டேன் என கூறிஉள்ளார் என என்டிடிவி செய்தி வெளியிட்டு உள்ளது. மேலும் காவலில் வழங்கப்படும் உணவு குறித்தும் புகார் தெரிவித்து உள்ளார். “என்னுடைய பாஸ்வேர்டை சிபிஐயிடம் தெரிவிக்கவில்லை, தெரிவிக்கவும் மாட்டேன். என்னுடைய தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து உள்ள செல்போனை ஏன் அவர்கள் விசாரிக்க வேண்டும்? என்னுடைய போன் 2016-ம் ஆண்டு தயாரிப்பு. வழக்கு 2008-ம் ஆண்டு சம்பந்தப்பட்டது, அவர்கள் எப்படி இரண்டையும் இணைத்து சாடமுடியும்? என பதில் கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Next Story