யோகியின் கோட்டை நொறுங்கியது ‘சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியை குறைத்து மதிப்பிட்டோம்’ யோகி ஆதித்யநாத்


யோகியின் கோட்டை நொறுங்கியது ‘சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியை குறைத்து மதிப்பிட்டோம்’ யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 14 March 2018 1:05 PM GMT (Updated: 14 March 2018 1:14 PM GMT)

உத்தபிரதேசம் இடைத்தேர்தலில் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் தொகுதியை சமாஜ்வாடி கைப்பற்றியது. #UPByPoll #Gorakhpur



லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா 71 தொகுதிகளை கைப்பற்றியது. அதேவேகத்தில் கடந்த அண்டு அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா பெரும் வெற்றியை தனதாக்கியது. அம்மாநில முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். துணை முதல்-மந்திரிகளாக கேஷவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோரும் பதவி ஏற்று கொண்டனர்.

 யோகி ஆதித்யாநாத் மற்றும் கேஷவ் பிரசாத் மவுரியா ஆகியோர் தங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பதவியேற்றனர்.  இதனால் அவர்களுடைய பாராளுமன்ற தொகுதிகளான கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதிகள் காலியானது. இந்த தொகுதிகளுக்கு உறுப்பினர்களை தேர்வுசெய்ய இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதா ஆட்சி செய்யும் உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிவானது முக்கியம் பெற்றது. கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இருதொகுதிகளிலும் பா.ஜனதா, சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப்போட்டி நிலவியது. கோரக்பூர் தொகுதியில்  47.45 சதவித வாக்குகளும், புல்பூர் தொகுதியில் 37.39 சதவித வாக்குகளும் பதிவாகியது. குறைந்த அளவிலே வாக்குப்பதிவு நடந்தது. 

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இருதொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து சமாஜ்வாடி முன்னிலை பெற்றது. ஆளும் பாரதீய ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்தது. பூல்பூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் 59,613 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை பா.ஜனதாவிடம் இருந்து தன்வசப்படுத்தினார். 

யோகியின் கோட்டையிலும் சமாஜ்வாடி வெற்றி

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் பா.ஜனதா பின்னடைவு என்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்து உள்ளது. கோரக்பூர் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு 5 முறை தேர்வு செய்யப்பட்டவர் யோகி ஆதித்யநாத். இப்போது அவர் முதல்-மந்திரியாக உள்ள நிலையில் அவருடைய தொகுதியில் பா.ஜனதா பின்னடைவு என்பது அக்கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாகவே உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாகவே கோரக்பூர் தொகுதி பா.ஜனதா வசம் இருந்து வந்தது. இப்போது சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணியாக நின்று அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியும் தனியாக களமிறங்கியது. 

கோரக்பூர் தொகுதியில் 10 வேட்பாளார்கள் களம் இறங்கினாலும் பா.ஜனதாவின் உபேந்திர சுக்லா, காங்கிரஸ் கட்சியின் சுகிதா சட்டர்ஜீ காரீம் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் பிரவீன் நிஷாத் இடையேவே கடுமையான போட்டி நிலவியது.

இன்று நடைபெற்று வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாடி தொடர்ந்து முன்னிலையை பெற்றது. யோகி ஆதித்யநாத் கோட்டையான கோரக்பூரில் சமாஜ்வாடி கட்சி வெற்றியை நோக்கி பயணம் செய்தது. சமாஜ்வாடி கட்சி முன்னிலை பெற்ற நிலையில் அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள். யோகியின் கோட்டையிலும் சமாஜ்வாடி கட்சி வெற்றியை தனதாக்கி உள்ளது. சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் பிரவீன் குமார் நிஷாத் 21,961 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

 யோகி ஆதித்யநாத் பேட்டி

பாரதீய ஜனதா தோல்வியை தழுவிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத்,  உள்ளூர் பிரச்சனையே தோல்விக்கு காரணம் என கூறிஉள்ளார். 

கோரக்பூர் மற்றும் பூல்பூர் இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாவின் தோல்வி குறித்து ஆராயப்படும். சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ்வாதி கூட்டணியை குறைத்து மதிப்பிட்டதும் தோல்விக்கு காரணம். இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வியடைந்ததற்கு உள்ளூர் பிரச்சனையே காரணம் மத்திய அரசியல் கிடையாது என கூறிஉள்ளார் யோகி ஆதித்யநாத். 

Next Story