ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டம்-சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்


ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டம்-சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
x
தினத்தந்தி 16 March 2018 6:04 AM GMT (Updated: 16 March 2018 6:42 AM GMT)

ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. #RamSetu #SupremCourt

புதுடெல்லி,

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் இருந்து இலங்கையின் மன்னார் வளைகுடா வரையில் சுண்ணாம்புக் கற்களாலான மேடான பகுதி செல்கிறது. இது இயற்கையாக உருவானது என்று ஒருசாரார் கூறுகின்றனர். ஆனால், புராணத்தின்படி சீதையை மீட்க ராமர் மற்றும் வானரங்களால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் நம்புகின்றனர். ‘ஐஸ் ஏஜ்’ காலத்தில் இந்தப் பாலம் இயற்கையாக உருவானது என்று புவியியல் ஆதாரங்கள் கூறுவதாக என்சைக்கிளோபீடியா பிரிட்டானிகா கூறி உள்ளது. இதற்கிடையே இவ்வழியாக முன்னெடுக்க திட்டமிடப்பட்ட  மத்திய அரசின் சேது சமுத்திர திட்டம் பெரும் விவாதப்பொருளாகியது.

தென் தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுத்திட்டம், சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால், கிழக்கு, மேற்கு கடற்கரை இடையே 424 கடல் மைல் தொலைவு குறையும். பயண நேரமும் 30 மணி நேரம் குறையும். இலங்கையை சுற்ற வேண்டியதும் இல்லை. இந்த திட்டம் மத்தியில் அமைந்திருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாவது ஆட்சி காலத்தில், 2005-ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டப்பணிகளால் ராமேசுவரத்துக்கும், மன்னாருக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் பாதிக்கப்படும் என கருத்து எழுந்தது. சேது சமுத்திர திட்டத்திற்கு ராமர் பாலத்தை அகற்றக்கூடாது என சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். 

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் ‘சேது சமுத்திர திட்டம் ராமர் சேது பாலத்துக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மாற்றுவழியில் நிறைவேற்றப்படும்’  என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்றும்போது, ராமர் சேது பாலத்தை இடிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என பா.ஜனதா அரசு கூறி இருந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு சார்பில்  எழுத்துபூர்வமான  பதில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது . அந்த மனுவில் ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என கூறி உள்ளது.சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் ராமர் பாலத்தை அகற்ற முடியாது என கூறப்பட்டு உள்ளது.

Next Story