மோடி அரசுக்கு எதிராக தனியாக நம்பிக்கையில்லா தீர்மானம் தெலுங்கு தேசம் அதிரடி; எதிர்க்கட்சிகள் ஆதரவு


மோடி அரசுக்கு எதிராக தனியாக நம்பிக்கையில்லா தீர்மானம் தெலுங்கு தேசம் அதிரடி; எதிர்க்கட்சிகள் ஆதரவு
x
தினத்தந்தி 16 March 2018 3:34 PM GMT (Updated: 16 March 2018 3:34 PM GMT)

ஜெகன் மோகன் ரெட்டிக்கு பா.ஜனதாவுடன் மறைமுக உறவு உள்ளது என குற்றம் சாட்டிஉள்ள தெலுங்கு தேசம், தனியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. #YSRCongress #TDP #NoConfidenceMotion


புதுடெல்லி,


ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆந்திர மாநில அரசியல் கட்சிகள் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. 

ஆந்திர மாநில எம்.பி.க்கள் போராட்டம் காரணமாக அவை நடவடிக்கையை முடங்கி உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முடிவு செய்தது. தெலுங்கு தேசமும் முதலில் ஆதரவு தெரிவித்தது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் ஆதரவை கோரியது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவை தெரிவித்து உள்ளன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் தனிப்பட்ட முறையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது, இதற்கான நோட்டீஸை வழங்கி உள்ளது.  

ஜெகன் மோகன் ரெட்டிக்கு பா.ஜனதாவுடன் மறைமுக உறவு உள்ளது என குற்றம் சாட்டிஉள்ள தெலுங்கு தேசம், தனியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. 2014-ம் ஆண்டு மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளதால் இப்போது நோட்டீஸை ஏற்கமுடியாது என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மனுவிற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பதில் உரைத்துவிட்டார். எனவே திங்கள் கிழமை முன்னெடுக்கப்படலாம். 
 
இதுபற்றி தெலுங்கு தேசம் தலைவர் தோட்டா நரசிம்மன் பேசுகையில், நாங்கள் கொள்கையின்படியே செல்கிறோம். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே அதன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது முறையான செயலாக இருக்காது. எனவே கூட்டணியில் இருந்து நாங்கள் முதலில் விலகினோம். சபாநாயகர் சுமித்ரா மகாஜனை நாடாளுமன்றத்தில் உள்ள அவருடைய அறையில் சந்தித்து நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசை கொடுத்து உள்ளோம் என்றார்.  

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கொண்டு வருவதாக கூறப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது எங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. ஜெகன் மோகன் ரெட்டி பா.ஜனதாவுடன் மறைமுக உறவு கொண்டிருக்கிறார். அதனால்தான் நாங்கள் தனிப்பட்ட முறையில் கொண்டு வருகிறோம். ஆந்திர மக்களுக்கு அநீதி இழைத்தற்காக மோடி அரசுக்கு சரியான பாடம் கற்பிப்போம். பா.ஜனதா அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டுள்ள முதல் கட்சி தெலுங்கு தேசம்தான் என்றும் குறிப்பிட்டார். 

தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த ரமேஷ் பேசுகையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய்சாய் ரெட்டி பிரதமர் மோடியை சந்திக்க முயற்சி செய்து வருகிறார், இது இருகட்சிகள் இடையே மறைமுகமான வலைப்பின்னல் உள்ளது என்பதையே காட்டுகிறது என்றார். 

இன்று நாங்கள் போதிய நேரம் கிடைக்காத காரணத்தினால் முயற்சியை முன்னெடுக்கவில்லை. ஆனால் திங்கள் கிழமை பல்வேறு கட்சிகளிடம் ஆதரவை பெறுவோம், 54 எம்.பி.க்கள் கையெழுத்தை பெறுவோம், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவோம் என்றார் ரமேஷ். மக்களவையில் 50 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்படும். அவையில் தெலுங்கு தேசத்திற்கு 16 எம்.பி.யும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 9 எம்.பி.க்களும் உள்ளனர். தீர்மானத்திற்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்து உள்ளது.
 
இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. ஒய்.வி.சுப்பா ரெட்டியும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு இடது சாரிகள், காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அமளி காரணமாக அவை முடங்கியது. இதனால் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நேற்று மக்களவையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து உள்ளது. 

இதுபற்றி மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், ‘‘இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்போம். அதே நேரம் 2 மாநில கட்சிகள் தங்களின் அரசியல் விளையாட்டுக்காக இதை நடத்தக்கூடாது’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முகமது சலிம் பேசுகையில், மக்களவையில் ஆந்திர அரசியல் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் போது நாங்கள் அதனை ஆதரிப்போம்,” என்றார். 

Next Story