பா.ஜனதாவை கடுமையாக விளாசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியும் ஊழல்வாதிதான் என சாடல்; முழு பேச்சு விபரம்


பா.ஜனதாவை கடுமையாக விளாசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியும் ஊழல்வாதிதான் என சாடல்; முழு பேச்சு விபரம்
x
தினத்தந்தி 18 March 2018 12:52 PM GMT (Updated: 18 March 2018 12:52 PM GMT)

பாரதீய ஜனதா ஒரு அமைப்பின் குரலாகவே இருக்கும், காங்கிரஸ் தேசத்தின் குரலாக இருக்கும் என்று ராகுல் காந்தி கூறினார். #CongressPlenarySession #RahulGandhi #BJP


புதுடெல்லி,

 காங்கிரஸ் மாநாட்டில் 50 நிமிடங்கள் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசினார்.  
 
ராகுல் காந்தி பேசுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம், பிஎன்பி மோசடி, பொருளாதார நிலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் பிற விவகாரங்களில் ஆளும் பாரதீய ஜனதாவை கடுமையாக தாக்கி பேசினார். 

ராகுல் காந்தி பேசுகையில், மகாபாரதத்தில் கெளரவர்களை போன்று அதிகாரத்திற்காக பா.ஜனதா வடிவமைக்கப்பட்டு உள்ளது. கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை பா.ஜனதா தலைவராக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் காங்கிரஸில் இதுபோன்ற ஒருநகர்வை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்தியா, ஒருபோதும் எங்களை பா.ஜனதா போன்று நடக்க செய்யாது. நாம் எதுவும் செய்யவில்லை என்றால் தண்டிக்கும். பாரதீய ஜனதா ஒரு அமைப்பின் குரலாகவே இருக்கும், காங்கிரஸ் ஒரு தேசத்தின் குரலாக இருக்கும் என்றார். 

பிரதமர் மோடி முக்கியமான நேரங்களில் அமைதியாகவே இருந்து வருகிறார் எனவும் விமர்சனம் செய்தார் ராகுல் காந்தி. 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை கடுமையாக சாடிய ராகுல் காந்தி, பாகிஸ்தானுக்கு செல்லாமல் இந்தியாவிற்காக போராடிய இஸ்லாமியர்களை இந்தியர்கள் கிடையாது என அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் தமிழர்களை அழகிய தமிழ் மொழியில் இருந்து மாறுமாறு வற்புறுத்துகிறார்கள். வடகிழக்கு மாநில மக்களிடம் நீங்கள் சாப்பிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள், பெண்கள் ஒழுங்காக உடையணிய வேண்டும் என்கிறார்கள் என்று பேசினார்.
 
தேசத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் கட்சியின் பங்கு உள்ளது எனவும் ஸ்திரமாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். 

ராகுல் காந்தி மேலும் பேசுகையில், 

காங்கிரஸில் மாற்றம்

 காங்கிரஸ் தேசத்தின் பலமாகும். காங்கிரஸ் அரசால் மட்டுமே வேலைவாய்ப்பை வழங்க முடியும். அதற்காக காங்கிரஸ் கட்சி மாற வேண்டும். இதனை உங்களில் சிலர் விரும்ப மாட்டீர்கள். ஆனால் இந்த இயக்கம் மாற வேண்டும். நம்மிடம் அதிகமான ஆற்றல் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் அடிப்படை தொண்டர்கள் மற்றும் கட்சியின் தலைவர்கள் மத்தியில் தடுப்பு சுவர் உள்ளது. அந்த சுவரை உடைக்க வேண்டும் என்பதே முதல் பணியாகும். அதனை அன்புடன் உடைக்க முதல்கட்டமாக கட்சியின் தலைவர்களுடன் பேச வேண்டும். 


   
மோடியின் பெயர் விளக்கம்

மோடி என்ற பெயரின் விளக்கம் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான கூட்டு என்பதே. மோடி, மோடிக்கு உங்களுடைய பணம் ரூ. 30 ஆயிரம் கோடியை வழங்குகிறார். அந்த பணம் மாறி, மோடி, மோடியின் பணத்தை மோடியை மார்க்கெட்டிங் செய்யவும் தேர்தலில் போட்டியிடவும் கொடுக்கிறார்.  


 சீன விவகாரம் 

டோக்லாம் விவகாரத்தில் சீனாவை மோடி அரசால் கையாள முடியவில்லை. 

மார்க்கெட்டிற்கு செல்லுங்கள். நீங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பார்க்கலாம். சீனா எல்லாப்பகுதியிலும் உள்ளது. டோக்லாம், மாலத்தீவு, இலங்கை மற்றும் பர்மாவில். 
 
பொருளாதார விவகாரம் 
 
ஒருபுறம் இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது. மறுபுறம் நம்முடைய கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாது.

“நீங்கள் வசதியானவர் என்றால் நீங்கள் வங்கியில் இருந்து ரூ. 30 ஆயிரம் கோடியை கொள்ளையடிக்க முடியும். பாரதீய ஜனதா அரசு வங்கியில் கொள்ளையடிப்பவர்களை பாதுகாக்கும். நிதி மந்திரி அமைதியாக இருப்பார், ஏனென்றால் அவரும், அவருடைய மகளும் முதலாளிகளின் நண்பர்கள் ஆவார்கள்.”

 நீங்கள் ஏழையாக இருந்தால் உங்களுக்கு எந்தஒரு வழியும் கிடையாது. நீங்கள் விவசாயியாக இருக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளராக இருக்க வேண்டும் அல்லது வேலையில்லாதவராக இருக்கவேண்டும். 

இப்போது உலகின் முன்னதாக இரு பார்வைகள் உள்ளது அமெரிக்கா - சீனா. இந்த பார்வையின் மத்தியில் இந்தியாவும் இடம்பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு.
 
பிரச்சினை திசைத்திருப்பம்

தேசத்தின் பிரச்சனையில் நம்முடைய கவனங்களை பிரதமர் மோடி திசைத்திருப்புகிறார். 

தேசம் எதிர்க்கொண்டு உள்ள சவால்களை ஏற்றுக்கொள்ளாமல் நம்முடைய பிரச்சனையில் இருந்து நம்மை திசைத்திருப்புகிறார். நாம் நினைத்துக் கொண்டிருப்பதைவிட நம்முடைய பிரச்சனை தாண்டி செல்கிறது. 

மோடி ஊழலுக்கு எதிராக போராடவில்லை

பிரதமர் மோடி ஊழலுக்கு எதிராக போராடவில்லை, அவரும் ஊழல்வாதிதான் (ரபேல் போர் விமான விவகாரம்). 

ஒரு விமானம் வாங்க நாங்கள் ரூ. 570 கோடி வழங்கினோம். பிரதமர் மோடி அதே விமானத்திற்கு ரூ. 1670 கோடி வழங்கி உள்ளார். பிரதமர் மோடி ரூ. 1,100 கோடியை அதிகமாக வழங்கி உள்ளார். போர் விமானங்களை மறந்துவிட்டால், காய்கறி வாங்குவதில் கூட இதுபோன்ற ஒருநபரின் மீது நம்பிக்கையை வைத்திருக்க முடியாது. மோடி ஊழலுக்கு எதிராக போராட வில்லை. அவரும் ஊழல்வாதிதான். 

ரபேல் போர் விமானங்கள் வாங்கும் விவகாரத்தில் ஒப்பந்தத்தை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் மாற்றிவிட்டார். நாங்கள் 126 விமானங்கள் வாங்க பேச்சுவார்த்தை நடத்திய தொகையில் இப்போது 36 விமானங்கள் வாங்கப்படுகிறது இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 




Next Story