பீகாரில் நக்சலைட்டு தலைவர்களின் ரூ.68 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கம்; அமலாக்க துறை அதிரடி
பீகாரில் நக்சலைட்டுகள் அமைப்பின் இரு மூத்த தலைவர்களின் ரூ.68 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை முடக்கியுள்ளது. #EnforcementDirectorate
புதுடெல்லி,
பீகாரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த நடவடிக்கையில் பாதுகாப்பு படைகள், போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு கழகம் ஆகியவை ஈடுபட்டு உள்ளன.
நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அவர்களது சொத்துகளை முடக்கும் பணியில் அமலாக்க துறை ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் ஜார்க்கண்ட்டை அடிப்படையாக கொண்ட நக்சலைட்டு அமைப்பின் தலைவர் சந்தீப் யாதவ் என்பவரின் ரூ.86 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.
இந்த நிலையில், பீகார் போலீசார் பிரதுமன் சர்மா மற்றும் பிரமோத் சர்மா ஆகிய 2 நக்சலைட்டு சகோதரர்கள் மீது 67 எப்.ஐ.ஆர்.கள் மற்றும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தது. இதன்மீது அமலாக்க துறை சமீபத்தில் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இவர்கள் இருவருக்கும் வேறு வேறு பெயர்களும் உள்ளன. இவர்களது பெயர்களை கூறி கொண்டு பலர் இவர்கள் சார்பில் பணவசூலில் ஈடுபட்டு உள்ளனர் என்ற விவரமும் அமலாக்க துறைக்கு தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், பல்வேறு பிளாட்டுகள், ஒரு வீடு மற்றும் வங்கி இருப்புகள் என ரூ.67 லட்சத்து 16 ஆயிரத்து 134 மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை முடக்கியுள்ளது.