நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்:நிதின்கட்காரி


நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்:நிதின்கட்காரி
x
தினத்தந்தி 23 March 2018 12:00 AM GMT (Updated: 23 March 2018 12:36 AM GMT)

நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார். #NitinGadkari

புதுடெல்லி,

உலக தண்ணீர் தினத்தையொட்டி டெல்லியில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

மாநிலங்களுக்கு இடையே தண்ணீரை பங்கீடு செய்வதில் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்கான நீண்டகால திட்டத்தை அரசு தீட்டி வருகிறது. மராட்டியத்தில் ஓடும் கோதாவரியின் கிளை நதியான இந்திராவதியில் தண்ணீர் எப்போதும் அதிக அளவில் செல்கிறது.

எனவே அங்கிருந்து தெலுங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கிருந்து ஆந்திர மாநிலம் போலாவரம் அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக கிருஷ்ணா நதியில் தண்ணீர் இணைக்கப்படும். இந்த தண்ணீர் சோமசிலா அணை மூலம் பெண்ணாறு வழியாக காவிரியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோதாவரியில் இருந்து 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதில் இருந்து சுமார் 1,000 டி.எம்.சி. தண்ணீரை இவ்வாறு இணைப்பதன் மூலம் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும். இந்த திட்டம் குழாய் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தவிர மேலும் 30 நதிகளை இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. இத்திட்டங்கள் இந்த ஆண்டு தொடங்கி படிப்படியாக செயல்படுத்தப்படும். நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழா முடிந்து வெளியே வந்த அவரிடம் தமிழகத்தை சேர்ந்த செய்தியாளர்கள், சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்துள்ள மார்ச் 30-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதில் கூறாமல் விழா நடந்த இடத்தில் இருந்து நிதின் கட்காரி வேகமாக காரை நோக்கி சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த நிருபர்களிடம் “உங்களுக்கு என்ன, செய்தி தானே வேண்டும்? என்று எதிர் கேள்வி கேட்டவாறே நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் காரில் ஏறி அவர் சென்று விட்டார். 

Next Story